அகில இலங்கை பௌத்த மகா சங்கத்தினரால் நடத்தப்பட்ட சம்மேளனத்தில் நாம் எவ்வித தவறையும் காணவில்லை. அந்த வகையில் அந்த மாநாட்டையும் அதில் முன்வைக்கப்பட்ட விடயங்களையும் எந்த வகையிலும் அரசாங்கம் குறைமதிப்பிற்கு உட்படுத்தாது என பொதுநிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பௌத்த மதகுருமார்கள் உட்பட நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் ஒன்று கூடுவதற்கான உரிமை காணப்படுகிறது. பௌத்த மத குருமார்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் அல்லது நெருக்கடிகள் காணப்படுமாயின் அவை குறித்து அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டால் எம்மால் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
எவ்வாறிருப்பினும் பௌத்த தேரர்களால் சம்மேளனம் நடத்தப்படுவதில் எவ்வித தவறையும் நாம் காணவில்லை. வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சம்மேளனத்தில் முன்வைக்கப்பட்ட சாதகமான விடயங்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்துவோம். ஆரம்ப கால கட்டத்திலிருந்தே பௌத்த மதகுமார் பிரஜைகளுக்கும் அரசாங்கத்துக்கும் நல்வழி காண்பித்துள்ளனர்.
எனவே இந்த சம்மேளனத்தையும் அதில் முன்வைக்கப்பட்ட விடயங்களையும் நாம் ஒருபோதும் குறைமதிப்பிற்கு உட்படுத்த மாட்டோம். அவற்றிலுள்ள சாதகமான விடயங்களை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் கவனத்தில் கொள்வோம். பௌத்த மதகுமார் மாத்திரமின்றி எந்தவொரு பிரஜையாலும் நாட்டு நலனுக்காக முன்வைக்கப்படும் எந்தவொரு முன்மொழிவையும் எமது அரசாங்கம் நிராகரிக்காது என்றார்.