பொருளாதார நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவருவதற்காக மேற்பார்வைக் குழுக்களை நிறுவுவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நிலையற்ற உலகளாவிய சூழல் உருவாகியுள்ள நிலையில், சிறிய அளவிலான திறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இலங்கையின் பொருளாதாரத் துறைகள் பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளன.
எனவே, இலங்கையைப் பாதிக்கும் எதிர்பாராத அபாயங்கள் தொடர்பாக விரைவான மற்றும் முற்போக்கான நடவடிக்கைகளை எடுத்தல், சந்தை நிலைமைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் குடிமக்களின் அன்றாட வாழ்க்கையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்துவதற்காக உரிய நேரத்தில் விரைவான தலையீடுகளைச் செய்வது அத்தியாவசியமாகியுள்ளது.
அதற்கமைய பொருளாதாரக் கண்காணிப்புக் குழுவுடன் இணைந்து, உலகளாவிய நிலையற்ற தன்மையினால் உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் மக்கள் வாழ்க்கைக்கு ஏற்படும் மோசமான பாதிப்புகளைக் குறைப்பதற்கு எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் தொடர்பான பொருத்தமான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக 4 குழுக்களை நிறுவுவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரின் தலைமையிலான வலுசக்தி குழு எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி விநியோகத்தை நிலையாகப் பேணுவது தொடர்பான அவசர கொள்வனவுகளுக்குத் தேவையான கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, விநியோக ஆதாரங்கள் மற்றும் புதிய விநியோகஸ்தர்களைக் கண்டறியும் பணிகளில் ஈடுபடும்.
பிரதமர் தலைமையிலான அரச சேவையை முறையாகப் பேணுவதற்கான குழு அரச சேவையைத் தொடர்ச்சியாகவும், திறமையாகவும், முறையாகவும் முன்னெடுத்துச் செல்வதற்கும் பொருளாதார நடவடிக்கைகளைப் பேணுவதற்கும், பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்கும் விரைவான முடிவுகளை எடுப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரின் தலைமையிலான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தைக் கண்காணிப்பதற்கான குழு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் அரச மற்றும் தனியார் விநியோகச் சங்கிலிகளைத் தொடர்ச்சியாகப் பேணுவதன் மூலம் பொதுமக்களுக்குச் சந்தையில் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு வலுவூட்டல் மற்றும் சமூக விவகார அமைச்சரின் தலைமையிலான பல்வேறு சமூக அடுக்குகளின் நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான குழு அன்றாட மக்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் பாதிப்புகளை உடனடியாகக் கண்டறிந்து, உரிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து அவற்றுக்கு விரைவான பதிலளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.