புத்தளத்தில் கொரிய நாட்டவரை தாக்கியதாகக் கூறப்படும் நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வென்னப்புவ, வேவா வீதியைச் சேர்ந்த 39 வயது சந்தேக நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குள்ளான கொரிய நாட்டவரான 27 வயதுடைய கிம் சிங் ஹியோங் மரவில அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளனவர் வென்னப்புவ, சார்லஸ் வில்லியம் மாவத்தையில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார். அத்துடன் அவர் அருகிலுள்ள தேவாலயத்தில் கற்பித்து வந்துள்ளார்.
16 ஆம் திகதி சந்தேக நபர் அனுமதியின்றி தேவாலய வழிபாட்டில் கலந்து கொண்டு, தேவாலயத்தின் பராமரிப்பாளர் என்று கூறப்படும் கொரியப் பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
17 ஆம் திகதி, தாக்குதலுக்குள்ளான கொரிய நாட்டவர் வென்னப்புவ நகரில் தேவாலயத்திற்கு நாற்காலிகள் வாங்கச் சென்றதாகவும், முந்தைய நாள் தேவாலயத்தில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் சந்தேக நபர், கொரிய நாட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதன்போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.