கற்பிட்டி, முஸல்பட்டி கிராமத்தில் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையொன்று, அரைவாசி நீர் நிரப்பப்பட்டிருந்த பீப்பாய் (Barrel) ஒன்றிற்குள் விழுந்து துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தது.
கற்பிட்டி, முஸல்பட்டி கிராமத்தில் வசித்து வந்த ஒரு வயது மூன்று மாதங்களான குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.
குழந்தையின் பாட்டி திடீரென உயிரிழந்ததால் தந்தை நுவரெலியாவிற்குச் சென்றிருந்த நிலையிலும், தாய் கடுமையாக சுகவீனமுற்று வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போதே அச்சிறுமி இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
குழந்தை ஏனைய குழந்தைகளுடன் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த போதே, அவர் இந்த பீப்பாயிற்குள் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இதனை யாரும் அறியாததால், சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக அச்சிறுமி அந்த பீப்பாயிற்குள் இருந்துள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகவீனமுற்று உறங்கிக்கொண்டிருந்த தாய் விழித்தெழுந்து பார்த்தபோது, மகள் வீட்டில் இல்லாததால் தேடிய போதே, சிறுமி இவ்வாறு உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டுள்ளார்.
மரணம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.