ஜூன் 7 ஆம் தேதி அதிகாலை பிளைண்ட் ரிவரில் (Blind River) ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது காயமடைந்த தீயணைப்பு வீரர் ஒருவர், தற்போது மருத்துவமனையில் சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தத் தீ விபத்தின் காரணமாக ஒருவர் காயமடைந்ததுடன், நான்கு பேர் தங்களது இருப்பிடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள மூன்று உள்ளூர் வணிக நிறுவனங்களும் சேதமடைந்துள்ளன.
வுட்வார்ட் அவென்யூவில் (Woodward Avenue) உள்ள இரண்டு சொத்துக்களில் அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து குறித்து அறிந்து, பிளைண்ட் ரிவர் தீயணைப்புத் துறையினர் விரைந்து செயற்பட்டனர்.
“இச்சம்பவத்தை எதிர்கொள்ள மொத்தம் 17 தீயணைப்பு வீரர்களும் ஐந்து தீயணைப்பு வாகனங்களும் அனுப்பப்பட்டன” என்று அதிகாரிகள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
பலத்த காயங்கள்
“சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், மேலதிக சேதங்களைத் தடுக்கவும் தீயணைப்புப் படையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.”
இந்த முயற்சியின் போதே அந்தத் தீயணைப்பு வீரர் காயமடைந்துள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பாதிக்கப்பட்ட தீயணைப்பு வீரர் தற்போது கடுமையான, அதேவேளை சீரான நிலையில் (Serious but stable condition) இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளைண்ட் ரிவர் தீயணைப்புத் துறை முழுவதின் பிரார்த்தனைகளும் எண்ணங்களும் எங்களது தீயணைப்பு வீரருடனும், அவர் குணமடைந்து வரும் நிலையில் அவரது குடும்பத்தினருடனும் உள்ளன.”
தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கட்டிடத்திற்கு ஏற்பட்டுள்ள சேதம் கணிசமானதாகக் கருதப்படுகிறது,” என்று அதிகாரிகள் கூறினர்.
“விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், மேலதிக விவரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவை பின்னர் வெளியிடப்படும்.”