திமுக தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவுடன் உரையாடி விட்டு, அதை எங்கள் கமிட்டியில் தெரிவிப்போம். கமிட்டி தான் இறுதி முடிவை எடுக்கும். மேலும் பாஜகவை வீழ்த்துவதே பிரதான இலக்கு என்று சிபிஐ வீரபாண்டியன் தெரிவித்து உள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையேயான 3 ஆம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (மார்ச் 7 ஆம் தேதி) நடைபெற்றது. தொகுதி பங்கீடு தொடர்பாக கடந்த 27 ஆம் தேதி இரு கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், 2 ஆம் கட்டமாக கடந்த 3 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அறிவாலயத்திற்கு வருகை தந்திருந்தார்.
இன்றைய பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறுகையில், ‘கட்சியின் மாநிலக் குழு சார்பாகவும், பேச்சுவார்த்தைக் குழுவின் சார்பாகவும் முதல்வரை சந்தித்து, தொகுதிப் பங்கீடு குறித்து விரிவாகப் பேசினோம். தற்போதைய அரசியல் சூழலில், பாஜகவை வீழ்த்துவதே எங்களின் முதன்மையான கடமை.
தமிழகத்தில் ஒரு வலுவான அரசியல் அலை வீசுகிறது. தமிழக முதலமைச்சரின் நலத்திட்டங்கள், அவரின் ஒற்றுமை உணர்வு மற்றும் தமிழ் மக்களின் நல்லிணக்க கலாச்சாரம் இவை யாவும் மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெற செய்யும். தமிழகத்தின் வெற்றிதான் இந்தியாவின் புதிய திசையைத் தீர்மானிக்கும்.
இங்கிருந்து புறப்படுகிற அந்த வெற்றி திசை தான் இந்திய மண்ணில் ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும், கூட்டாட்சி தத்துவத்தையும், சமூக நீதியையும் பாதுகாக்கும். அந்த வகையில் எங்களது கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணியாகப் பயணிக்கப் போகிறது. தொகுதிகள் குறித்து நாங்கள் பேசியதில் ஏறத்தாழ ஒரு முடிவு எட்டப்பட்ட சூழல் உருவாகி உள்ளது.