ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே காவலில் வைக்கப்பட்டு நடத்தப்படும் விதம் குறித்து அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் எழுப்பியுள்ள கவலைகள் பெரும் அதிர்ச்சியளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) எதிராகப் போராடிய செயற்பாட்டாளர்கள் தற்போது ஏன் இந்த விவகாரத்தில் மௌனம் காக்கிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாகத் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாமல் ராஜபக்ஷ பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
சுரேஷ் சல்லே நீதவானின் விளக்கமறியல் உத்தரவின் கீழ் வைக்கப்படவில்லை; மாறாக அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
“இங்கு ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவென்றால், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகப் பல வருடங்களாகப் பிரச்சாரம் செய்து வந்த பல மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தற்போது மௌனம் காப்பதுதான். அவர்களின் இந்த திடீர் மௌனம், கொள்கை ரீதியிலான அவர்களின் நடுநிலைமை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.” என்று நாமல் கூறியுள்ளார்.
“அரசியல் நோக்கிலான விசாரணை உண்மையான நீதியை வழங்காது”
“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நாம் அனைவரும் உறுதியாக இருக்கிறோம். ஆனால், அந்த நீதி எந்தவொரு பக்கச்சார்பும், அரசியல் செல்வாக்கும் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அணுகுமுறையும் இன்றி வழங்கப்பட வேண்டும். உண்மையை கண்டறிவதை விடுத்து, விசாரணைகள் அரசியலால் வழிநடத்தப்பட்டால், அது இன்னமும் உண்மையான நீதிக்காகக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இழைக்கப்படும் துரோகமாக அமைந்துவிடும்” என்றும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
விசாரணை அதிகாரிகளுக்கு எதிராகக் கேள்வி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, இந்தத் தாக்குதலில் நேர்ந்த அலட்சியங்களுக்கு யார் தனிப்பட்ட ரீதியில் பொறுப்பு என்பதைத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, ஆனால் முரண்பாடாக, அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட சில நபர்களே தற்போது இந்த விசாரணைகளை முன்னின்று நடத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் விசாரணைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. பொறுப்புக்கூறல் என்பது மிக முக்கியமானது. ஆனால், அரசியல் பழிவாங்கல்களை நோக்கமாகக் கொண்ட விசாரணைகள் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருபோதும் உண்மையான நீதி கிடைக்காது” என்று நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.