இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், 24 வயதான தமிழ் கலைஞர் சங்கீத்சன் கணேஷ்குமார் (Hiphop Sangee) கைது செய்யப்பட்டமைக்குக் கனடாவின் பிராம்ப்டன் நகர மேயர் பட்ரிக் பிரவுன் (Patrick Brown) தனது பலத்த கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ‘X’ (டுவிட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ள மேயர் பட்ரிக் பிரவுன், “இந்தக் கைது நடவடிக்கை பேச்சுரிமையை அப்பட்டமாக மீறும் செயலாகும். ஒரு கலைஞர் தனது அடையாளத்தை வெளிப்படுத்துவதற்காகவும், இசையைப் பகிர்ந்துகொள்வதற்காகவும் அவர் மீது குற்றஞ்சாட்டுவது ஜனநாயக விழுமியங்களைக் குலைக்கும் செயலாகும்” என அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ஒரு ஆயுதம்
இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதாகத் தொடர்ச்சியாக உறுதியளித்த போதிலும், மாற்றுக்கருத்துடையோரின் குரல்களை ஒடுக்குவதற்கு இந்தச் சட்டத்தையே ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றன என்று மேயர் பிரவுன் சுட்டிக்காட்டினார்.
“2009ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலையின் உச்சக்கட்டத்திற்குப் பிறகும், தமிழர்கள் இன்னும் தீவிர இராணுவக் கண்காணிப்பு மற்றும் முறையான ஒடுக்குமுறையின் கீழேயே வாழ்ந்து வருகின்றனர். இந்தக் கைது நடவடிக்கையானது, பிராம்ப்டனில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவிடம் போன்ற நினைவுத் திட்டங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்துகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.
சங்கீத்சன் கணேஷ்குமாரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியுள்ள அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கையையும் ஆதரித்துள்ளார்.