நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் சிறு நிதிக் கடன்களை மீளச்செலுத்த முடியாதவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. நுவரெலியா, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே மேற்படி நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
சிறு நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குறித்த உபகுழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்ஹ தலைமையில் அண்மையில் கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
நாடு முழுவதிலும் சிறுநிதிக் கடன்களால் பாதிக்கப்பட்டவர்களின் நிலுவைத் தொகை உள்ளிட்ட தகவல்களைத் திரட்டுவதற்கு முன்னோடியாக நுவரெலியா, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் முறையே ஹட்டன், கோரளைப்பற்று தெற்கு, வெலிக்கந்தை மற்றும் வெள்ளவத்தை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் தரவுகளைச் சேகரிக்கத் திட்டமிட்டிருப்பதாக உபகுழுவின் தலைவர் தெரிவித்தார். இதற்கு அமைய தகவல்களைத் திரட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பது அல்லது அவர்களை அந்தப் பிரச்சினையிலிருந்து மீட்டு எடுப்பதற்கான தலையீட்டை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பில் மேலும் கலந்துரையாட சிறுநிதிக் தொழில்துறையினர் சங்கத்தில் புதிவுசெய்யப்பட்ட 34 நிறுவனங்களையும் அழைத்துக் கலந்துரையாடலை நடத்துவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேற்படி கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சி.எஸ் சத்துரி கங்கானி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, (சட்டத்தரணி) அனுஷ்கா திலகரத்ன, சுனில் ரத்னசிறி ஆகியோரும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.