நாட்டில் தற்போது டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட எரிசக்தி மூலங்களைப் பெற்றுக்கொள்வதில் பேக்கரித் தொழில்சார்ந்தோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசாங்கம் முறையான வேலைத்திட்டம் ஒன்றினை வகுத்துத் தர வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ள அவர், இவ்வாறான இக்கட்டான சூழலிலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
ரத்தொழுகமவில் புதன்கிழமை (11) காலை 10.00 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்:
இலங்கையிலுள்ள பேக்கரிகளில் 25 சதவீதமானவை எரிவாயு மூலமும், 25% முதல் 30% வரையானவை டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மூலமும் இயங்குகின்றன. ஏனையவை விறகு அல்லது மாற்று எரிசக்திகளைப் பயன்படுத்துகின்றன.
பேக்கரித் தேவைகளுக்காக எரிபொருளைக் கொள்கலன்களில் (Cans) கொண்டு செல்வதே வழக்கம். ஆனால், தற்போது கொள்கலன்களில் எரிபொருள் வழங்க அரசாங்கம் தடை விதித்துள்ளதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, பேக்கரிகளுக்குத் தேவையான எரிபொருளைக் கொள்கலன்களில் பெற்றுக்கொள்ள விசேட நடைமுறை ஒன்றை அரசு உருவாக்க வேண்டும்.
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு, விலை உயர்வு மற்றும் மின்சாரத் தடை குறித்துப் பல பேக்கரி உரிமையாளர்கள் தமக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.