அடுத்த மாதம் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக பேருந்து சேவையை ஆரம்பிக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கையானது ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நவீன வசதிகளுடன் கூடிய 430.7 மில்லியன் ரூபா முதலீட்டில் முதற்கட்டமாக 10 நவீன தாழ்தள (Low-floor) குளிரூட்டப்பட்ட பேருந்துகள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இந்த பேருந்துகள் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் எவ்விதத் தடையுமின்றி ஏறி இறங்கும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பேருந்திலும் 33 ஆசனங்கள் உள்ளதோடு, 80 பயணிகள் வரை பயணிக்க முடியும். சக்கர நாற்காலியில் பயணிப்போருக்கான விசேட பாதுகாப்பு வசதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இச்சேவையானது காலை மற்றும் மாலை வேளைகளில் 40 நிமிடங்களுக்கு ஒருமுறை மாக்கும்புர – கோட்டை, மாக்கும்புர – கடவத்தை ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் குறிப்பாக, மஹரகம அபேக்ஷா மருத்துவமனை மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனை போன்ற முக்கிய சுகாதார நிலையங்களை இணைக்கும் வகையில் இந்த வழித்தடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.