அரசாங்கம் நீதியரசர்களின் ஓய்வு வயதை அதிகரிக்க முற்படும் விவகாரத்தில், தனிப்பட்ட நிதிப் பயன்கள் அல்லது அங்கீகாரங்களை விடவும், நாட்டின் அரசமைப்பையும் நீதித்துறை கட்டமைப்பையும் பாதுகாப்பதே தற்போதைய மிக முக்கிய தேவையாகும் என ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரத்தினம் தெரிவித்துள்ளார்.
‘நீதித்துறையின் சுதந்திரத்தை சீர்குலைக்கும் அரசியல் சூழ்ச்சிகளை தோற்கடிப்போம்’ எனும் பொருளில் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினரால் கொழும்பு அமாரி நட்சத்திர விடுதியில் வியாழக்கிழமை (09) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான ஜெப்ரி அழகரத்தினம், மைத்திரி குணரத்ன மற்றும் எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
மக்களாட்சி, சமத்துவம் மற்றும் நல்லாட்சி என்பன அரசியல் கட்சிகளிடம் மட்டும் ஒப்படைக்கப்பட வேண்டியவை அல்ல. பாராளுமன்றமோ, நிறைவேற்று அதிகாரமோ அல்லது நீதித்துறையோ மக்களின் எஜமானர்கள் அல்ல் அவர்கள் அரசமைப்பின் கீழ் மக்களால் நியமிக்கப்பட்ட வெறும் முகவர்கள் மற்றும் அறங்காவலர்கள் மாத்திரமே. எனவே, நமது முகவர்கள் அரசமைப்பை மீறுகிறார்களா என்பதை மக்கள் எப்போதும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்.
மேன்முறையீட்டு நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் இந்த முயற்சி, எவ்வித வெளிப்படைத்தன்மையுமின்றி, சிவில் சமூகத்துடனோ அல்லது சட்டத்தரணிகள் சங்கத்துடனோ எவ்வித ஆலோசனைகளும் நடத்தப்படாமல் முற்றிலும் இரகசியமாக முன்னெடுக்கப்படுகின்றது. இது மிகவும் ஆபத்தான ஒரு நிலையாகும்.
இந்தத் திருத்தம் தொடர்பாக 25,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீலங்கா சட்டத்தரணிகள் சங்கம், கடந்த மே 25 ஆம் திகதி ஜனாதிபதிக்கு மிகத் தெளிவான, தர்க்கரீதியான காரணங்களை உள்ளடக்கிய கடிதமொன்றை அனுப்பியிருந்தது. இந்தத் திருத்தம் நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை முற்றாக அழித்துவிடும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனினும், ஜனாதிபதியிடமிருந்து அதற்கு இதுவரை எந்தவொரு முறையான பதிலும் கிடைக்கவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.
உலக நாடுகளில் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதால் ஓய்வு வயதை நீடிக்க வேண்டும் என்ற தர்க்கங்கள் அரசாங்கத் தரப்பால் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இவ்வாறான சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் போது, பல மாதங்கள் சகல தரப்பினருடனும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டு, அதுவும் எதிர்காலத்திலேயே அமுல்படுத்தப்படுகின்றன. மாறாக, தற்போது பதவியில் இருக்கும் ஒரு சில குறிப்பிட்ட நபர்களை இலக்கு வைத்து அவசரமாகச் செய்யப்படுவதில்லை.
இந்த அரசாங்கம் முறைமை மாற்றத்தை வாக்குறுதி அளித்தே ஆட்சிக்கு வந்தது. நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை ஒழிப்பதாகக் கூறினார்கள். ஆனால், இரண்டு வருடங்களாக அது குறித்துப் பேசாமல், இப்போது திடீரென குறிப்பிட்ட சில நீதியரசர்களின் ஓய்வு வயதை மட்டும் நீடிக்க அவசரம் காட்டுவது ஏன்? தலைமை நீதியரசர் உட்பட இன்னும் சில நீதியரசர்கள் விரைவில் ஓய்வு பெறவுள்ள நிலையிலேயே இந்தத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இது நீதித்துறையைக் கைப்பற்றும் முயற்சியாகவே பார்க்கப்பட வேண்டும். இது ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் இழைக்கப்படும் அவமதிப்பாகும்.
நீதிமன்றங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை சிதைவடைந்தால், மக்கள் சட்டத்தை கையில் எடுக்கும் விபரீதம் ஏற்படும். நாம் எந்தவொரு அரசாங்கத்தின் நல்ல திட்டங்களையும் ஆதரிக்க வேண்டும், அதேவேளை தவறானவற்றை கண்மூடித்தனமாக ஏற்காமல் எதிர்க்க வேண்டும். எனவே, அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க இந்த இரகசிய அரசமைப்புத் திருத்த முயற்சிக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.