தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி ஒருவரும் மேலும் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மஜ்தல் செல்ம் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் ரத்வான் படையணியின் தளபதியாகக் கருதப்படும் அபு கலீல் பர்ஜி கொல்லப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலில் மேலும் இரண்டு ஹிஸ்புல்லா உறுப்பினர்களும் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தெற்கு லெபனானின் பல பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பின் உட்கட்டமைப்புகள் எனத் தாங்கள் கருதும் இடங்கள் மீது மேலதிகத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தத் தகவல்கள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
மோதல்கள் தீவிரமடைந்ததிலிருந்து இஸ்ரேலினால் லெபனானில் 1,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், இதில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்களும் அடங்குவர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.