திமுக ஆட்சியை மாற்றுவதற்கு தவெக தலைவர் விஜய்யால் மட்டுமே முடியும் என்று கட்சியின் தலைமை நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் செங்கோட்டையன் பேசுகையில், “இனிவரும் காலங்களில் போலீஸ், நடத்துநர்களிடமும் விசில் அடிக்கக் கூடாது என்ற சொல்லப் போகின்றனர்.
விஜய்யை திரைப்படத்தில்தான் ஹீரோ என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால், எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் அரசியல் ஹீரோவாகவும் அவர்தான் வரவிருக்கிறார்.
தேர்தல் எப்போது வரப் போகிறது என்று பல நாடுகளிலிருந்து கேட்டு வருகின்றனர். இதுவரையில் நாம் காணாத ஒரு காட்சியாக, வெளிநாடுகளிலிருந்து 3 லட்சம் பேர் விஜய்க்கு வாக்களிப்பதற்காக தேதியை தேடிக் கொண்டிருக்கின்றனர். இவருக்கு வாக்களிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து ரூ. 50,000, ஒரு லட்ச ரூபாய் என செலவு வருகிறார்கள்.
அவர்களின் (தேசிய ஜனநாயகக் கூட்டணி) கூட்டத்துக்கு 5 லட்சம் பேர் வருவர் என்று கூறினார்கள். 60,000 இருக்கைகள்தான் போட்டனர்; அதிலும் 10,000 இருக்கைகள் காலி. அவர்களிலும் 20,000 பேர் தூங்கிக்கொண்டுதான் இருந்தனர்.
மேலும், ஆட்சி மாற்றம் வரும், திமுக ஆட்சியைத் தகர்த்தெறிவோம் என்றெல்லாம் கூறினர். ஒருவர்கூட கைதட்டவில்லை.
ஆனால், திமுக ஆட்சியை மாற்றுவதற்கு விஜய்யால் மட்டும்தான் முடியும்” என்று தெரிவித்தார்.