உக்ரைனை கைப்பற்றும் திறன் ரஷ்யாவுக்கு கிடையாது என்று அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 2022, பிப்., முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜ்ஜியா ஆகிய நான்கு உக்ரைன் மாகாணங்களை கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மேலும், உக்ரைனுக்கு உதவும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷ்யா கடும் எச்சரிக்கையை விடுத்து வருகிறது.
இதனிடையே, ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா போர் தொடுக்க இருப்பதாக பிரபல செய்தி நிறுவனத்தின் தகவலுக்கு அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் பதிலளித்துள்ளார். உக்ரைனை கைப்பற்றும் திறன் ரஷ்யாவுக்கு கிடையாது, இப்படிப்பட்ட நிலையில் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது என்பது சாத்தியமில்லாதது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்; இது முற்றிலும் பொய்யான பிரசாரம். ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவதற்கான, அதிபர் டிரம்பின் அமைதி முயற்சியை சீர்குலைக்கும் செயலாகும். லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த இந்தப் போரை நிறுத்தும் அதிபர் டிரம்பின் முயற்சியை தடுக்கப் பார்க்கிறார்கள். மக்களிடையே கோபம் மற்றும் அச்சத்தை தூண்டி போரை விரிவுபடுத்த முயற்சி நடக்கிறது.
ரஷ்யாவுடன் அமெரிக்க ராணுவத்தை நேரடியாகப் போரில் ஈடுபடுத்துவதற்காக நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் விரும்புகின்றன. ஆனால், உண்மையில் நேட்டோவுடன் போரிடுவதை ரஷ்யா தவிர்த்து வருகிறது. தற்போதைய சூழலில் உக்ரைனை கைப்பற்றும் திறன் ரஷ்யாவுக்கு கிடையாது, இவ்வாறு கூறியுள்ளார்.