தமிழீழத்தை நாசமாக்குவது யார் என்பதனை தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ளாவிட்டால் வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் அழியும் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன். வவுனியா மாநகர மேயரையும் சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரையும் வடக்கு ஆளுநர் பதவி நீக்கியமை முற்றிலும் சரியானது. அதனை நான் வரவேற்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
எதிர்வரும் மாதங்களில் நான் எனது பாராளுமன்ற பதவியை இராஜிநாமா செய்தால், எனது ஆவனத்துக்கு பெண் ஒருவர் நியமிக்கப்படுவார். தயவு செய்து அந்தப் பெண்மணியை பாதுகாப்பான இடத்தில் அமரக்கூடியவாறு ஆசன நிரல் நிலையை இங்கே ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். இவ்விடத்தில் ஒரு பெண்மணி இருக்கும் போது அதற்கு அடுத்ததாக பெண் பித்தர் இருந்தால் அந்த பெண்ணால் இருக்க முடியாது. இதனால் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி கதிரைகளை மாற்றியமைக்க வேண்டும். கதிரைகளை மாற்றித் தருமாறு நான் பல தடவைகள் கடிதம் கொடுத்துள்ளோம். இதில் கவனம் செலுத்துமாறு கோருகின்றோம்.
இதேநேரம் வவுனியா மாநகர மேயரையும் சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரையும் வடக்கு ஆளுநர் பதவி நீக்கியுள்ளார். ஆளுநரின் இந்த நடவடிக்கை முற்றிலும் சரியானது. அதனை நான் மிகவும் வரவேற்கின்றேன். தமிழ் மக்கள் மிகத் தெளிவாகவும், அவதானமாகவும் இருக்க வேண்டும். தமிழரை கொலை செய்வது யார்? தமிழீழம் என்ற பெயரில் தமிழரை நாசமாக்குவது யார் என்பதனை தமிழ் இனம் என்றாவது ஒருநாள் விளங்கிக்கொள்ளாவிட்டால் எமது வடக்கும், கிழக்கும் தொடர்ந்தும் அழியும் என்பதனை எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.