டொராண்டோவில் நடைபெற்று வரும் FIFA உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளுடன் தொடர்புடைய பகுதிகளில், அனுமதியின்றி ட்ரோன்களை (Drones / UAV) பறக்கவிடுவது முற்றிலும் சட்டவிரோதமானது என டொராண்டோ போலீசார் பொதுமக்களுக்கு மீண்டும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
“ட்ரோன்களுக்கு அனுமதியில்லை. எந்தவொரு விதிவிலக்குகளும் இல்லை. வான்பரப்பைத் தெளிவாக வைத்திருங்கள்,” என ஞாயிற்றுக்கிழமை காலை எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் போலீசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஃபோர்ட் யார்க் (Fort York) மற்றும் த பென்ட்வே (The Bentway) ஆகிய இடங்களில் அமைந்துள்ள ‘FIFA ரசிகர் திருவிழா’ (FIFA Fan Festival) பகுதிகள் மற்றும் டொராண்டோவில் போட்டியிடும் அணிகளுக்கான அதிகாரப்பூர்வ பயிற்சி மையமான எட்டோபிகோக்கின் சென்டென்னியல் பூங்கா (Etobicoke’s Centennial Park) ஆகியவற்றின் வான்பரப்பில் ட்ரோன்களைப் பறக்கவிடுவதற்கே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட வான்பரப்புகளில் பறக்கும் ட்ரோன்களைக் கண்டறிவதற்கான நவீன தொழில்நுட்பங்கள் (Detection technology) பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், விதிகளை மீறுபவர்களுக்குக் கடுமையான அபராதங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். டொராண்டோ ஸ்டேடியம், எக்சிபிஷன் பிளேஸ், டவுன்ஸ்வியூ பூங்கா மற்றும் நியூ டெகும்செத்தில் உள்ள நொட்டவாசகா ரிசார்ட் பயிற்சி மையம் ஆகிய இடங்களும் ட்ரோன் பறக்கவி தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் பலர் மீது வழக்குப்பதிவு: கடந்த சனிக்கிழமையன்று (ஜூன் 20), டொராண்டோ நகரின் மையப்பகுதியில் உள்ள FIFA மைதானங்களுக்கு மேல் ட்ரோன்களைப் பறக்கவிட்ட இரண்டு நபர்கள் மீது கனடா விமான போக்குவரத்து விதிகளின் (Canadian Aviation Regulations) கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மீது ‘ரிமோட் கண்ட்ரோல் சாதனத்தை அலட்சியமாக இயக்கியமைக்காக’ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும், நகரின் FIFA மைதானங்களுக்கு மேல் பறக்கவிடப்பட்ட ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டு, தொடர்புடைய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை ஏழுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
போட்டிகள் நடைபெறாத நாட்களிலும் இந்த ட்ரோன் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் முழுமையாக அமலில் இருக்கும் என ஃபெடரல் ஒழுங்குமுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெரிசலான வான்பரப்பை நிர்வகிக்கவும், நிகழ்வின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், போட்டியிடும் அணிகள் ரகசியமாக ஒன்றையொன்று உளவு பார்ப்பதைத் தடுப்பதற்கும் இந்தத் தடை பெரிதும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.