அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயன்ற வழக்கில், குற்றவாளியான ரியான் ரூத்திற்கு ஆயுள் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், புளோரிடாவில் உள்ள டிரம்பிற்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் அவர் விளையாடிக் கொண்டிருந்த போது, புதர்களுக்கு இடையே துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த 60 வயதுடைய ரியான் ரூத் பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார்.
உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை புளோரிடா நீதிமன்றத்தில் நீதிபதி ஐலீன் கேனன் முன்னிலையில் நடைபெற்றது.
ரியான் ரூத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, வழக்கறிஞர் இல்லாமல் தனக்காகத் தானே வாதிட்டார்.
கடந்த செப்டம்பர் மாதம் நடந்த விசாரணையில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டபோது, நீதிமன்றத்திலேயே பேனாவால் தனது கழுத்தைக் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், “இது ட்ரம்பை கொலை செய்ய நடந்த முயற்சி, ஆனால் நான் தோற்றுவிட்டேன்” என அவர் குறிப்பிட்டிருந்தது முக்கிய ஆதாரமாக அமைந்தது.
புதன்கிழமை (04) நடைபெற்ற இறுதித் தீர்ப்பின் போது, நீதிபதி ஐலீன் கேனன்,
“உங்களது இந்த சதித் திட்டம் மிகவும் திட்டமிடப்பட்ட மற்றும் கொடூரமானது. ஒரு மனித உயிரைப் பறிக்க முயன்ற உங்களது செயல் ஜனநாயகத்திற்கு எதிரானது. நீங்கள் அமைதியானவரோ அல்லது நல்லவரோ அல்ல.” எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ரியான் ரூத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காகக் கூடுதலாக 07 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆயுள் தண்டனை என்பதால் அவர் தனது வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிக்க வேண்டியிருக்கும்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ரியான் ரூத்தின் புதிய வழக்கறிஞர் மார்ட்டின் ரோத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து, இரண்டாவது கொலை முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.