டொரோண்டோ நகர மையத்தில் உள்ள அமெரிக்கத் தூதரக கட்டிடத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற மேற்படி சம்பவத்தை டொரோண்டோ காவல்துறையினர் “தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்” என்று குறிப்பிட்டுள்ளதோடு துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை தேடியும் வருகின்றனர் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் ரோயல் கனடியன் மவுண்டட் காவல்துறை(RCMP) மற்றும் டொரோண்டோ காவல்துறை அதிகாரிகள், Queen Street West மற்றும் University Avenue அருகில் உள்ள தூதரகக் கட்டிடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் காலை சுமார் 5:30 மணியளவில் சம்பவ இடத்துக்குச் சென்றதாக தெரிவித்தனர். ஆனால் டொரோண்டோ காவல்துறை துணைத் தலைவர் ஃபிராங்க் பொரெடோ (Frank Barredo) உண்மையான துப்பாக்கிச் சூடு காலை 4:29 மணிக்கு நடந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சம்பவ இடத்துக்கு வந்தபோது, துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் முன்பகுதி கதவு மற்றும் கட்டிடத்தில் ஏற்பட்ட சேதம் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார். கட்டிடத்துக்குள் மக்கள் இருந்திருக்கலாம் என நம்பப்பட்டாலும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றங்களுடன் — குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக நடத்தும் போருடன் — இந்தச் சம்பவத்திற்கு தொடர்பு உள்ளதா என கேட்கப்பட்டபோது, பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய சம்பவமாக இது உள்ளதா என்பதை விசாரணை மூலமே கண்டறிய முடியும் என்று டொரோண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.
கனேடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) சமூக ஊடகத்தில் “ இது கொடூரமான வன்முறைச் செயலும் அச்சுறுத்தும் முயற்சியும்” என்று பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், கனடாவின் பாதுகாப்பு சூழலில் ஏற்படும் மாற்றங்களை மதிப்பாய்வு செய்யவும், உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்தும் வழிகளைப் பற்றி விவாதிக்கவும் தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.