எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடிப்பு சம்பவம் தொடர்பான இந்திய அரசின் விசாரணையில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்த வைத்தியர் உமர் நபி உட்பட பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய மருத்துவர்கள் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்தத் திட்டம் தீட்டப்பட்டதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தித் தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
13 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்த குறித்த டெல்லி சம்பவம் தொடர்பில் விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், உமரும் மற்றொரு முக்கிய சந்தேக நபரான வைத்தியர் முசம்மில் கனாயும் 2021ஆம் ஆண்டு துருக்கிக்கு விஜயம் செய்தபோது தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (JeM) இன் தீவிர செயல்பாட்டாளர்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும் விசாரணையில், குறைந்தது எட்டு சந்தேக நபர்கள் நான்கு இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், தலா இரண்டு பேர் கொண்ட குழுக்களாக நான்கு நகரங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு குழுவும் பல IED எனப்படும் அதாவது மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை எடுத்துச் செல்ல இருந்நதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
செங்கோட்டை குண்டுவெடிப்பு குற்றவாளிகளான வைத்தியர் முசம்மில், வைத்தியர் அடீல், உமர் மற்றும் ஷாஹீன் ஆகியோர் இணைந்து சுமார் 2 மில்லியன் ரூபாய் பணத்தை திரட்டியதாகவும் அதை உமரிடம் ஒப்படைத்தாகவும் கூறப்படுகின்றது.