சென்னை,
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை சிக்கல்களுக்குப் பிறகு திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் சட்டவிரோதமாகக் கசிந்தது. ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விவகாரம் தொடர்பாகச் சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஃப்ரீலான்ஸ் எடிட்டர் உமா சங்கர், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தனக்கு இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும், இப்படக் கசிவில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், “படம் கசிந்த பிறகுதான் இவர் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்; இவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது” என கடும் ஆட்சேபம் தெரிவித்தார். காவல்துறையும் கைது செய்யப்பட்ட மற்றவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. இதையடுத்து, வழக்கை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதி, தயாரிப்பு நிறுவனம் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்தார்.
#Janayagan #ThalapathyVijay #HVinoth #TVK #JanayaganLeaked #CinemaPiracy #MadrasHighCourt #VijayFans #CyberCrime #JanayaganMovie #LegalUpdate #KollywoodPiracy #VijayPolitics #JanayaganIssue #CourtNews #SanthoshNarayanan #TNElection2026 #MovieLeaked #JusticeForJanayagan #TrendingNews