உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேமீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பாக ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை (Preliminary Objections) முன்வைக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். இந்த மனுவை விசாரணைக்கு எடுக்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உண்டா என்பது குறித்து இந்த ஆட்சேபனைகள் அமையும் என அவர் குறிப்பிட்டார்.
சுரேஷ் சாலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் அரசாங்கத்தினால் பல ஆணைக்குழுக்கள் மற்றும் விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும், அவற்றில் எதிலும் தனது கட்சிக்காரருக்கும் இந்தத் தாக்குதலுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக எந்தவொரு ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் சுரேஷ் சாலே இலங்கையில் இருக்கவில்லை என்றும், அவர் 2019 ஜனவரி முதல் நவம்பர் 30 வரை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் (National Defence College) பாதுகாப்பு தொடர்பான பாடநெறி ஒன்றில் கலந்துகொண்டிருந்தார் என்றும் சட்டத்தரணி தெரிவித்தார்.
தற்போது வெளிநாட்டில் வசிக்கும் அசாத் மௌலானா என்பவர் பிரித்தானியாவின் ‘Channel 4’ தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் அடிப்படையிலேயே தனது கட்சிக்காரருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அந்த கூற்றுகளுக்கு எந்தவித ஆதார மதிப்பும் இல்லை என்றும் அவர் வாதிட்டார்.
மேலும், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக சுரேஷ் சாலே பணியாற்றியபோது, இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதம் அதிகரித்து வருவது குறித்து தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில் எச்சரிக்கை விடுத்திருந்ததாக சஞ்சீவ ஜயவர்தன தெரிவித்தார். அந்த எச்சரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல், அந்தத் தகவலைக் கொண்டு வந்த நபரையே அதிகாரிகள் தற்போது இலக்கு வைப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.
இது தொடர்பான மேலதிக சமர்ப்பணங்களை எதிர்வரும் ஜூன் மாதம் 4-ஆம் திகதி ஆராய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது