கசின் சிறைச்சாலையின் சிறை அதிகாரிகள் பற்றிய தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்ட குரல் பதிவுகள் அடங்கிய கையடக்கத் தொலைபேசியுடன், சந்தேகநபர் ஒருவர் பொரல்லை, வனாத்தமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக சஹஸ்புர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடம் இருந்து 5 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறைச்சாலை வளாகத்துக்குள் போதைப்பொருள் அடங்கிய பந்துகளை தயாரித்து வீசுவதில் பிரபலமான “பந்து சுரேஷ்” என்பவருக்குச் சொந்தமான பொரல்லை, வனாத்தமுல்ல பகுதியில் உள்ள வீட்டில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கல்கிஸ்ஸ, பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் கொலையாளிகளை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற சாரதியாக அவர் செயற்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கடந்த 6ஆம் திகதி மகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு மூன்று நாட்களுக்கு முன்னர், இந்த சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டு வெளியில் வந்திருந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.