ஒட்டாவா — முகமது அல் ஹிந்தி (Mohammed Al Hindi) என்ற பாலஸ்தீன அகதி விண்ணப்பதாரரின் கோரிக்கை, கனடா அரசின் புதிய எல்லைச் சட்டமான C-12 காரணமாக இப்போது ஆபத்தில் உள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரிலிருந்து தப்பிக்கத் தனது குடும்பத்துடன் காசா பகுதியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு, 2023 கோடையில் சுமார் ஏழு வாரங்கள் அவர் கனடாவுக்கு வந்திருந்தார். கனேடியக் குடிமகளாக இருக்கும் தனது சகோதரிக்கு ஒரு சிறுநீரகத்தை தானம் செய்வதே அவரது அப்போதைய வருகையின் நோக்கமாக இருந்தது.
கனடாவின் புதிய C-12 சட்டத்தின்படி, ஜூன் 3, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு அகதி விண்ணப்பம் தாக்கல் செய்பவர்கள், அவர்கள் முதன்முதலில் கனடாவுக்குள் நுழைந்த தேதியிலிருந்து ஓராண்டுக்கு மேலாகியிருந்தால், அவர்களது விண்ணப்பம் அகதிகள் தீர்ப்பாயத்திற்கு (Immigration and Refugee Board) அனுப்பப்படாது. இந்த ஓராண்டு விதி ஜூன் 24, 2020 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முன் தேதியிட்டு (Retroactive) அமல்படுத்தப்பட்டுள்ளது.
“நான் ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்காக கனடாவுக்கு வந்தேன். ஒரு மனிதாபிமானச் செயலைச் செய்தேன். 2023-இல் எனக்குக் கனடாவில் தங்கும் எண்ணம் இருக்கவில்லை, அதற்கான காரணமும் இல்லை. எனது நாட்டில் எனக்கு வேலை, குடும்பம், கார், வீடு என அனைத்தும் இருந்தது,” என்று முகமது அல் ஹிந்தி லண்டன், ஒன்ராறியோவிலிருந்து தெரிவித்தார்.
அறுவை சிகிச்சை முடிந்து கனடாவை விட்டு வெளியேறினார். காசாவிற்குத் திரும்பினார். (ஐந்து நாட்களில் போர் தொடங்கியது).
வசந்த காலம் 2024: குடும்பத்துடன் எகிப்திற்குத் தப்பினார்.
பிப்ரவரி 2025: விசேட விசா திட்டத்தின் கீழ் மீண்டும் கனடா வருகை.
4 செப்டம்பர் 2025: அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பித்தார்.
அவர் முதல்முறை நுழைந்தது ஆகஸ்ட் 2023 என்பதால், அவர் விண்ணப்பித்த செப்டம்பர் 2025-க்குள் ஓராண்டு காலம் கடந்துவிட்டது. இதனால் அவர் தகுதியற்றவராகக் கருதப்படலாம் என குடிவரவுத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.
முகமது அல் ஹிந்தியைப் போலவே சுமார் 30,000 அகதி விண்ணப்பதாரர்கள் இத்தகைய சிக்கலில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
டொராண்டோவில் வசிக்கும் ஒரு ஈரானியப் பெண், தனது மகனுக்கு உதவ 2022-இல் கனடா வந்தார். ஈரானிய அரசால் தடைசெய்யப்பட்ட ஊடகத்தில் பணிபுரிந்த அவரது பெயர் கசிந்ததால், இப்போது நாடு திரும்பினால் உயிருக்கு ஆபத்து என அகதி விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் அவரும் ஓராண்டு கால அவகாசத்தைத் தாண்டியுள்ளதால் சட்டச் சிக்கலில் உள்ளார்.
மௌரித்தேனியா (Mauritania) மக்கள்: குடும்ப வன்முறை மற்றும் அரசியல் காரணங்களுக்காகத் தப்பி வந்த மூவர், நாடு கடத்தப்பட்டால் கொல்லப்படும் அபாயத்தில் இருப்பதாக அவர்களது சட்டத்தரணி கூறுகிறார்.
அகதி விண்ணப்பம் தகுதியற்றது என அறிவிக்கப்பட்டால், அவர்கள் ‘நாடு கடத்தலுக்கு முந்தைய அபாய மதிப்பீடு’ (Pre-removal risk assessment) என்ற செயல்முறைக்கு மட்டுமே செல்ல முடியும். ஆனால், இதில் வெற்றி பெறும் வாய்ப்பு மிகக் குறைவு என்றும், சட்டத்தரணிகள் வாதிட அங்கு அனுமதியில்லை என்றும் எட்மன்டனைச் சேர்ந்த குடிவரவு சட்டத்தரணி ஜூமன் எல்-அஸ்மார் (Jouman El-Asmar) கூறுகிறார்.
குடிவரவு அமைச்சர் லேனா தியாப் (Lena Diab) கூறுகையில், அகதிகள் முறையைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், உண்மையாகப் பாதுகாப்புத் தேவைப்படுபவர்களுக்கு விரைவாக உதவி கிடைப்பதை உறுதி செய்யவுமே இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்தார். 2025 இறுதியில் அகதி விண்ணப்பங்களின் தேக்கம் 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
முகமது அல் ஹிந்தி இப்போது மிகுந்த கவலையில் உள்ளார். “காசாவில் இப்போது மருத்துவமனைகளோ, சுத்தமான நீரோ எதுவுமில்லை. எனக்கு ஒரே ஒரு சிறுநீரகம் தான் உள்ளது. நான் எங்கே செல்வேன் என்று தெரியவில்லை,” என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.