கடந்த ஆண்டு சார்னியா (Sarnia) எல்லை வழியே 2.3 மில்லியன் டாலர் மதிப்புள்ள கொக்கெய்ன் போதைப்பொருளைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இன்னிஸ்ஃபில் (Innisfil) பகுதியைச் சேர்ந்த போக்குவரத்து லொறி (Transport truck) சாரதி ஒருவர், பெண் ஒருவரைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் பிராட்போர்ட் (Bradford) நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
35 வயதான பவன்தீப் தில்லான் (Pawandeep Dhillon), கடந்த 2024 அக்டோபரில் 911 அவசர அழைப்பைத் தொடர்ந்து, வீடு ஒன்றில் வைத்துப் பெண்ணைத் தாக்கிய குற்றச்சாட்டில் சவுத் சிம்கோ (South Simcoe) பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்த வாக்குமூலங்கள் அவர்களின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் (Body-worn cameras) பதிவாகியிருந்தன. அதேபோல், பொலிஸார் வீட்டிற்கு வருவதற்கு முன்னர் என்ன நடந்தது என்பது குறித்து தில்லான் அளித்த விளக்கமும் விசாரணை அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அந்தப் பெண்ணின் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் திரையிடப்பட்டன. அதில், தில்லான் தனது முடியைப் பிடித்து இழுத்து கத்தியபடியே, சுமார் 15 முறை கன்னத்தில் அறைந்தும் குத்தியும் தாக்கியதாகப் பெண் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், நீதிமன்றத்தில் இந்த வீடியோ ஆதாரங்கள் காண்பிக்கப்பட்ட போதிலும், அந்தப் பெண் தனது முந்தைய வாக்குமூலங்களை வாபஸ் பெற்றுக்கொண்டார் (Recanted). தான் தவறாகப் புரிந்து கொண்டதாகவும், தில்லான் தன்னைத் தாக்கவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். இதனால் அவர் ஒரு ‘விரோத சாட்சியாக’ (Hostile witness) அறிவிக்கப்பட்டார். பொலிஸாரிடம் அன்றைய தினம் ஏன் அவ்வாறு கூறினார், தற்போது அவரது வாக்குமூலம் ஏன் மாறியுள்ளது என்று விளக்கமளிக்குமாறு கோரப்பட்டபோது, சாட்சி கூண்டில் இருந்தவாறு அவர் பொலிஸாரும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞரும் (Crown prosecutor) இனவாதிகள் என்றும், அவர்கள் தனது வார்த்தைகளைத் திசைதிருப்பியதாகவும் குற்றம் சாட்டினார்.
முன்னதாக தில்லான் தனது மூக்கை உடைத்திருந்ததாகவும், தன்னையும் தனது குடும்ப உறுப்பினர் ஒருவரையும் சுட்டுக் கொல்லாமல் இருப்பதற்காகக் காடையர் குழுக்களுக்கு (Gang members) அவர் பணம் கொடுத்திருந்ததாகவும் சாட்சி பொலிஸாரிடம் கூறியிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தில்லான் கொக்கெய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்தியதாகவும், தாக்குதல் சம்பவத்திற்கு முந்தைய மாதங்களில் அவரது நடத்தை மிகவும் வன்முறையாகவும் கணிக்க முடியாததாகவும் மாறியதால் தனது உயிருக்கு பயந்ததாக அந்தப் பெண் வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சம்பவங்கள் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, சார்னியாவில் உள்ள ப்ளூ வாட்டர் பாலம் (Blue Water Bridge) கடவையின் வழியாக லொறியை ஓட்டி வந்த தில்லானை ஆர்சிஎம்பி (RCMP) மற்றும் கனடா எல்லைப் பாதுகாப்பு முகவர்கள் கைது செய்தனர். தில்லானின் லொறிக்குள் நான்கு பைகளில் அடைக்கப்பட்டிருந்த 86 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளும் பொலிஸாரும் தெரிவித்தனர்.
இதனையடுத்து, போதைப்பொருட்களை நாட்டுக்குள் இறக்குமதி செய்தமை மற்றும் கடத்தல் நோக்குடன் போதைப்பொருள் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளை ஆர்சிஎம்பி தில்லான் மீது சுமத்தியுள்ளது. இந்த போதைப்பொருள் வழக்கு விசாரணை இந்த இலையுதிர் காலத்தில் (Fall) எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கடந்த வாரம் பிராட்போர்ட் நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய தில்லான், தனது முகத்தை சூட் ஜாக்கெட்டால் மூடிக்கொண்டு அங்கிருந்த பிக்கப் லொறிக்குள் ஓடி மறைந்தார். பின்னர் சிறிது நேரத்தில் முகமூடி அணிந்தவாறு மீண்டும் நீதிமன்றத்திற்குத் திரும்பினார்.
தில்லான் சார்பில் தற்காப்பு வழக்கறிஞர் ஹர்வால் பாசி (Harval Bassi) முன்னிலையாகி வருகிறார். தில்லானின் தாக்குதல் வழக்கு விசாரணை அடுத்த மாதம் பிராட்போர்ட்டில் மீண்டும் தொடரவுள்ளது. அதேவேளை, சார்னியாவில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.