சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் துணைக் குழுவின் (SPT) தூதுக்குழு, இலங்கைக்கு மேற்கொண்ட ஒன்பது நாள் விஜயத்தின் போது கண்டறிந்த விபரங்களின் அடிப்படையில், தனது இரகசிய முதற்கட்ட அவதானிப்புகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தூதுக்குழு தனது இலங்கை விஜயத்தை புதன்கிழமை நிறைவு செய்யவுள்ளது.
நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்தத் தூதுக்குழு, ஜூன் 15ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததிலிருந்து, பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு விஜயம் செய்துள்ளதுடன், 2019ஆம் ஆண்டு இக்குழுவின் இறுதி விஜயத்திற்குப் பின்னர் நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களை மதிப்பீடு செய்வதற்காக அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதன் முக்கிய சந்திப்புகளில் ஒன்று இந்த வாரம் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இதில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய பங்குதாரர்கள் கலந்துகொண்டனர்.
சித்திரவதைகள் தொடர்பான பல விடயங்கள் குறித்து ஐநா குழுவினர் கேள்விகளை எழுப்பியதுடன், 2024ஆம் ஆண்டின் இறுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து தடுப்புக்காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஹேரத் தூதுக்குழுவிற்கு விளக்கமளித்தார்.
சித்திரவதைகள் மற்றும் ஏனைய கொடூரமான, மனிதநேயமற்ற அல்லது அவமதிப்பான நடாத்துகை அல்லது தண்டனைகளுக்கு எதிரான உடன்படிக்கையின் விருப்பத்திற்குரிய நெறிமுறையின் (OPCAT) 16ஆவது விதியின்படி, இக்குழு தனது இரகசிய முதற்கட்ட அவதானிப்புகளை இலங்கை அரசாங்கத்திற்கும், தேசிய தடுப்பு பொறிமுறைக்கும் வழங்கும் என மனித உரிமைகளுக்கான ஐநா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் (OHCHR) அறிக்கை தெரிவிக்கிறது.
இதனைத் தொடர்ந்து, இத்தூதுக்குழு தனது கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய இரகசிய அறிக்கை ஒன்றை இலங்கைக்கு தயாரித்து வழங்கும். OPCAT கட்டமைப்பின்படி, இலங்கை அதிகாரிகள் அதனை பகிரங்கப்படுத்துமாறு கோரும் வரை இந்த அறிக்கை இரகசியமாகவே இருக்கும். 2019ஆம் ஆண்டு இக்குழு இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கை இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை 2017ஆம் ஆண்டில் OPCAT நெறிமுறையை ஏற்றுக்கொண்டது. இதன் கீழ், இக்குழு எந்தவொரு உறுப்பு நாட்டுக்கும் விஜயம் செய்ய முடியும் என்பதுடன், நபர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்ட அல்லது பறிக்கப்படக்கூடிய இடங்களுக்கு முன்னறிவிப்பின்றிச் சென்று சோதனையிட முடியும். ஒவ்வொரு விஜயத்தின் போதும், இக்குழுவினர் அரசாங்க அதிகாரிகள், தேசிய தடுப்பு பொறிமுறையின் உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய ஐநா முகவர் அமைப்புகளைச் சந்தித்துக் கலந்துரையாடுகின்றனர்.