சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உள்ள இலங்கைப் பிரஜைகள், அப்பகுதியில் நிலவிவரும் பாதுகாப்புச் சூழலைக் கருத்திற் கொண்டு விழிப்புடன் இருக்குமாறும், உத்தியோகபூர்வ அவசர எச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஜேத்தாவிலுள்ள இலங்கையின் துணைத்தூதரக அலுவலகம் விடுத்துள்ள அவசர அறிவிப்பில், இலங்கையர்கள் தமது கைப்பேசிகளில் தேசிய எச்சரிக்கைச் செய்தியைப் பெற்றால் (National Warning Alert), உடனடியாக ஜன்னல்களிலிருந்து விலகிப் பாதுகாப்பான இடத்தை அடையுமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்தத் துணைத்தூதரக அலுவலகமே சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதிக்குப் பொறுப்பான இலங்கையின் உத்தியோகபூர்வ தூதரக அமைப்பாகும்.
வெளியில் இருப்பவர்கள் அருகில் உள்ள பாதுகாப்பான கட்டிடத்திற்குள் செல்லுமாறு அல்லது வலுவான சுவருக்குப் பின்னால் தஞ்சமடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், திறந்தவெளிகள், கண்ணாடிப்பகுதிகள், பால்கனிகள் மற்றும் மொட்டை மாடிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வாகன ஓட்டிகள் அவசர எச்சரிக்கையைப் பெற்றால், வாகனங்களை ஓரங்கட்டி நிறுத்துமாறும், ஆபத்து நீங்கிவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தும் வரை பாலங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களிலிருந்து விலகி இருக்குமாறும் துணைத்தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையர்கள் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகள் மற்றும் ஆபத்தான இடங்களைத் தவிர்க்குமாறும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்த்து, உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, அசம்பாவிதச் சம்பவங்களைப் புகைப்படம் எடுக்கவோ, வீடியோ பதிவு செய்யவோ அல்லது அவற்றைச் சமூக வலைத்தளங்களில் பகிரவோ, கருத்து தெரிவிக்கவோ வேண்டாம் என்றும், சவூதி அரேபியாவின் சட்ட திட்டங்களைச் சரியாகப் பின்பற்றுமாறும் இந்த அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அவசரநிலைகளுக்கு, மக்கா மற்றும் மதினா பிராந்தியங்களுக்கு 911 என்ற இலக்கத்தையும், சவூதி அரேபியாவின் பிற பகுதிகளுக்கு 998 என்ற இலக்கத்தையும் தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய அவசர சூழ்நிலைகளுக்காகத் துணைத்தூதரகம் 056 098 6671 என்ற அவசரத் தொடர்பு இலக்கத்தையும் வழங்கியுள்ளது.