நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலையைச் சீர்செய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றது என்று வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசு எடுக்கும் கடினமான தீர்மானங்களின் பின்னணி குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
அமைச்சரவை மற்றும் அரச நிறுவனத் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயற்படுவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நெருக்கடிகளுக்குத் தீர்வுகளைக் காண்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் ஒவ்வொருவரை ஒவ்வொரு விதமாகப் பாதிக்கும். அந்தப் பாதிப்புகள் அனைத்தையும் நுணுக்கமாக ஆராய்ந்தே நாம் முடிவுகளை எடுக்கின்றோம்.
இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் உலக நிலைமை எந்தப் பக்கம் திரும்பும் என்று சொல்ல முடியாது. குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் நம்மைப் பாதிக்கும். அதற்கேற்ப நாம் தயாராக வேண்டும் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வழங்கி வரும் ஆலோசனைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் தினமும் இங்கு பல ஆலோசனைகளை வழங்குகின்றார்.
அந்த ஆலோசனைகளை அமெரிக்கா போன்ற நாடுகள் ஏற்றுக்கொள்கின்றனவா என்று தெரியவில்லை. ஆனால், தற்போது எங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதோ அங்கிருந்தே நாம் தீர்வுகளைத் தேட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
தற்போதைய உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலுக்கு முகம் கொடுப்பதற்குத் தேவையான பொறிமுறைகளை அரசு ஏற்கனவே முன்னெடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது உறுதிபடத் தெரிவித்தார்.