16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் புதிய டிஜிட்டல் பாதுகாப்புச் சட்டத்தை கனடா கூட்டாட்சி அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் ‘டிஜிட்டல் பாதுகாப்புச் சட்டம்’ (Digital Safety Act) என்ற இந்த புதிய சட்டத்தின் அமலாக்கத்தைக் கண்காணிக்க, ஒரு பிரத்யேக ‘டிஜிட்டல் பாதுகாப்பு ஆணையம்’ (Digital Safety Commission) உருவாக்கப்பட உள்ளது. எனினும், குறிப்பிட்ட பாதுகாப்புத் தரமுறைகளைப் பூர்த்தி செய்யும் சமூக ஊடக தளங்களுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்களின் கருத்து: இதுகுறித்து கலாச்சாரத்துறை அமைச்சர் மார்க் மில்லர் கூறுகையில்,
“இணையதளங்களில் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களின் முக்கிய முன்னுரிமை.” என்று தெரிவித்தார்.
மேலும், நீதித்துறை அமைச்சர் சீன் பிரேசர் பேசுகையில்,
“இணையவழி ஆபத்துகளில் இருந்து குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதை உறுதி செய்யவே அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது.” என்றார்.
செயற்கை நுண்ணறிவு (AI) கட்டுப்பாடு: இணையப் பாதுகாப்புடன், ஏஐ சாட்பாட்கள் (AI Chatbots) தொடர்பான கவலைகளுக்கும் இந்த புதிய சட்டத்தில் தீர்வு காணப்பட உள்ளதாகத் தெரிகிறது.
சமூக ஊடகங்கள் இளைஞர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து உலகளவில் கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், பிற நாடுகளின் பாதுகாப்பு முயற்சிகளைத் தொடர்ந்து கனடா அரசும் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது