சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 3ஆம் திகதி பிற்பகல் 2:00 மணியளவில், நுவரெலியா இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நுவரெலியா மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தமிழ்நாட்டில் காய்கறி கடை உரிமையாளர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இந்திய நாட்டவர் ஆவார். மற்றையவர் நுவரெலியா, பியதிஸ்ஸபுரத்தை சேர்ந்த 42 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைந்துள்ள குறித்த இந்திய நாட்டவருக்கு சொந்தமான காய்கறி கடையிலேயே இந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் இருவரும் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, தலா 20,000 ரூபா வீதம் அபராதம் விதித்து நுவரெலியா நீதவான் புத்திகா தர்மதாச உத்தரவிட்டார்.