கனடாவின் ஒன்டாரியோ மாகாண போலீஸ் (OPP) காவலர் ஒருவர், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தொண்டு நிறுவன கோல்ஃப் போட்டியின் போது தனது சக பெண் அதிகாரியின் பின் பகுதியில் தட்டியதற்காக மூன்று ஆண்டுகளுக்குப் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். இது 2021 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவர் செய்த மூன்றாவது ஒழுங்கீனச் செயலாகும்.
ரென்ஃப்ரூ (Renfrew) ஓபிபி பிரிவைச் சேர்ந்த காவலர் மார்க் கான்ட்ரான் (Mark Condron), முதலில் 18 மாதங்களுக்கு மூன்றாம் நிலை காவலராகவும், அதைத் தொடர்ந்து அடுத்த 18 மாதங்களுக்கு இரண்டாம் நிலை காவலராகவும் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சமூக பாதுகாப்பு மற்றும் காவல்துறை சட்டத்தின் கீழ், கான்ட்ரான் பணியிடத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நவம்பர் 2025-இல் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒன்டாரியோ போலீஸ் நடுவர் மற்றும் தீர்ப்பாய ஆணையத்திற்காக ஓய்வு பெற்ற ஒட்டாவா போலீஸ் கண்காணிப்பாளர் கிறிஸ் ரென்விக் (Chris Renwick) கடந்த ஏப்ரல் 28 அன்று இந்தத் தண்டனை முடிவை எடுத்தார்.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, 7 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட ஒரு தற்காலிக சப்-இன்ஸ்பெக்டர் (Acting sergeant) ஆவார். அவர் திட்டமிட்டு நடத்திய அந்தப் பொது நிகழ்ச்சியில், அவரது மேலதிகாரிகள், சக ஊழியர்கள், குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கான்ட்ரான் இந்த அநாகரிகச் செயலில் ஈடுபட்டுள்ளார். இது அந்தப் பெண் அதிகாரிக்குப் பெரும் அவமானத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியதாக ரென்விக் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கான்ட்ரானின் முந்தைய ஒழுங்கீனச் செயல்கள்
-
நவம்பர் 2021 (முதல் சம்பவம்): சியூக்ஸ் லுக்அவுட் (Sioux Lookout) பகுதியில் நடந்த ஒரு சமூக விழாவில், கான்ட்ரான் மது அருந்திவிட்டு, அங்கிருந்த சிறுமிகள் உள்ளிட்ட இளம் பெண்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டார். கழிவறை கதவைத் திறந்து அவர்களைப் பார்த்து நாக்கைத் துருத்தியுள்ளார். இதற்காக அவர் தனது 50 மணி நேர ஊதியத்தை இழந்தார்.
-
ஜூன் 2023 (இரண்டாவது சம்பவம்): மது அருந்திவிட்டு தனது குழந்தைகளுடன் காரில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பள்ளத்தில் மோதி விபத்துக்குள்ளாக்கினார். இதுகுறித்து போலீசாருக்குத் தெரிவிக்காமல் மறைக்க முயன்றார். பின்னர் அவர் பிடிபட்டதைத் தொடர்ந்து, அவரது ஓட்டுநர் உரிமம் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டதுடன், கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 18 மாதங்கள் பதவி இறக்கம் செய்யப்பட்டார்.
பணிநீக்கம் செய்யக் கோரிய ஓபிபி (OPP)
கான்ட்ரானின் தொடர் தவறான நடத்தைகளைக் கவனித்த ஓபிபி தரப்பு வழக்கறிஞர், “அவர் ஒரு போலீஸ் அதிகாரியாகத் தொடர தகுதியற்றவர்” என்று வாதிட்டார்.
காரை மோதி விபத்துக்குள்ளாக்கிய வழக்கிற்காகப் பதவி இறக்கம் செய்யப்பட்ட வெறும் 15 நாட்களிலேயே, அவர் மீண்டும் இந்த பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். “நான்கு ஆண்டுகளில் மூன்று முறை தீர்ப்பாயத்தின் முன் நின்றிருப்பது அவரது குணாதிசய குறைபாட்டைக் காட்டுகிறது, இதைச் சீரமைக்க முடியாது, எனவே அவரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும்” என அரசுத் தரப்பு வலியுறுத்தியது.
ஆனால், கான்ட்ரானின் தரப்பு வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். கான்ட்ரானின் கடந்த கால (2019-23) பணிப் பதிவுகள் சிறப்பாக இருந்ததையும், அவர் காவலர் சங்கத் தலைவராக இருந்ததையும் சுட்டிக்காட்டினார்.
இறுதித் தீர்ப்பு
அதிகாரி கிறிஸ் ரென்விக் தனது இறுதி முடிவில், கான்ட்ரானை முற்றிலும் திருத்த முடியாது என்று தான் கருதவில்லை எனக் குறிப்பிட்டார்.
“அவர் தொடர்ந்து 18 மாதங்கள் மது அருந்தாமல் இருந்து, தனது மன உளைச்சல் (PTSD) சிகிச்சைக்கான ஆலோசனைகளை முறையாகப் பெற்றால், அவர் தன்னைத் திருத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவர் மீண்டும் ஓபிபியின் ஒரு நல்ல உறுப்பினராக மாறி, இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும். எனவே, அவரைப் பணிநீக்கம் செய்வதற்குப் பதிலாக, இந்த கடுமையான பதவி இறக்க தண்டனையே பொதுமக்களின் நம்பிக்கையைக் காக்க போதுமானது என்று நான் கருதுகிறேன்,” என ரென்விக் தீர்ப்பளித்தார்