வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது மகள், போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட மூலோபாய க்ரூஸ் ஏவுகணை சோதனைகளை கண்காணித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா–தென் கொரியா இராணுவ பயிற்சிகளுக்கு பதிலடி கொடுப்போம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ள சூழலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
Korean Central News Agency வெளியிட்ட படங்களில், ஒரு மாநாட்டு அறையில் அமர்ந்திருந்த இருவரும், ஒரு திரையில் Choe Hyon என்ற போர்க்கப்பலில் இருந்து ஆயுதங்கள் ஏவப்படும் காட்சிகளை பார்ப்பது காட்டப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காணொளி மூலம் ஏவுகணை ஏவுதலைக் கவனித்த கிம் ஜோங் உன், “வலுவான மற்றும் நம்பகமான அணு போர்தடுப்பு திறனை தொடர்ந்து பராமரிக்க வேண்டியது அவசியம்” என்று வலியுறுத்தியதாக KCNA தெரிவித்துள்ளது.
அந்த செய்தியில் அவரது மகளின் பெயர் குறிப்பிடப்படவில்லை. சுமார் 13 வயதாகும் அவரது மகள் Kim Ju Ae, 2022 இறுதியில் இருந்து இராணுவ அணிவகுப்புகள் மற்றும் ஆயுத சோதனைகள் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளில் தந்தையுடன் தோன்றிவருகிறார்.
கடந்த மாதம் தென் கொரியாவின் உளவு அமைப்பு, கிம் ஜோங் உன் தனது வாரிசாக அவரை அறிவிக்க நெருக்கமாக உள்ளதாக மதிப்பிட்டிருந்தது.
KCNA தகவலின்படி, ஏவப்பட்ட ஏவுகணைகள் வடகொரியாவின் மேற்கு கடற்கரை அருகிலுள்ள இலக்கு தீவுகளைத் துல்லியமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த ஏவுதல்கள் கடற்படையின் மூலோபாய தாக்குதல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும், படையினரை ஆயுதப் பயன்பாட்டில் பழக்கப்படுத்தவும் நடத்தப்பட்டதாக கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் Choe Hyon போர்க்கப்பலில் இருந்து இதே போன்ற க்ரூஸ் ஏவுகணை சோதனைகளை கிம் ஜோங் உன் நேரில் கண்காணித்திருந்தார். ஆனால் அந்த நிகழ்வில் அவரது மகள் காணப்படவில்லை. இந்த ஏவுகணை சோதனைகள், அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து நடத்தும் வசந்தகால இராணுவ பயிற்சிகள் தொடங்கிய பின்னர் இடம்பெற்றுள்ளன.