குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் காயம் அடைந்தவர்களில் மூன்று இலங்கையர்களும் உள்ளடங்குவதாக குவைத்துக்கான இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
காயமடைந்த மூன்று இலங்கையர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி லக்ஷித ரத்நாயக்க மற்றும் இலங்கைப் புலம்பெயர் தொழிலாளர்களின் தொழிலாளர் பிரச்சினைகள், நலன்புரி மற்றும் குறைகளை நிவர்த்தி செய்யும் பிரிவின் தலைவர் எம்.ஆர்.சி.பி. ஏகநாயக்க ஆகியோர், காயமடைந்தவர்களின் நிலைமையைக் கேட்டறிவதற்கும் தேவையான உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
தற்போது நிலவி வரும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, குவைத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்குமாறும், குவைத் அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டல்களைப் பின்பற்றி நடக்குமாறும் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.