கர்நாடக கடற்கரையில் சீன ஜிபிஎஸ் டிராக்கர் பொருத்தப்பட்ட கடல் புறா கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடற்படை தளத்தை உளவு பார்க்க சீனாவால் அனுப்பப்பட்டதா என சந்தேகம் எழுந்துள்ளது.
கர்நாடகாவின் கார்வார் பகுதியில் நாட்டின் முக்கிய கடற்படை தளம் உள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜிபிஎஸ் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்ட ஒரு கடல் புறா, கர்நாடகாவின் கார்வார் கடற்கரையில் உள்ள ஐஎன்எஸ் கடம்பா கடற்படைத் தளத்திற்கு அருகில் நேற்று (டிசம்பர் 17) கண்டெடுக்கப்பட்டது. இங்கு இந்தியாவின் முன்னணி விமானம் தாங்கி போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த கடல் புறாவின் முதுகில் பொருத்தப்பட்டிருந்த வழக்கத்திற்கு மாறான அந்தக் கருவியை உள்ளூர் மக்கள் கண்டறிந்து, வனத்துறையின் கடல்சார் பிரிவுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இது பற்றிய விசாரணையில்,இது ஒரு உளவுச் சாதனம் அல்ல, மாறாக கடல் புறாவின் இடப்பெயர்வு குறித்து ஆய்வு செய்யும் ஒரு அறிவியல் கருவி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த ஜிபிஎஸ் கருவியில் இருந்த இ-மெயில் முகவரி, சீன அறிவியல் அகாடமியின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்தது.இந்த கடற்பறவை ஆர்க்டிக் பகுதி உட்பட சுமார் 10,000 கி.மீ. தூரம் பயணித்து கர்நாடக கடற்கரைக்கு வந்துள்ளது புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அதிகாரிகள் அந்தச் சாதனத்தில் உளவு கேமராக்கள் அல்லது பிற சந்தேகத்திற்கிடமான மென்பொருள்கள் உள்ளதா என்பதைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது அந்த கடல் புறா வனத்துறையினரின் பராமரிப்பில் சிகிச்சை பெற்று வருகிறது. இதேபோன்ற ஒரு சம்பவம் நவம்பர் 2024-ல் கார்வாரில் ஒரு கழுகுடன் நடந்தது குறிப்பிடத்தக்கது, அதுவும் பின்னர் ஆராய்ச்சிப் பறவை என உறுதி செய்யப்பட்டது.