ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் குறித்த விசாரணையில் 19 ஆவது மற்றும் 20ஆவது சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்ப கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது பல அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து கடந்த மாதம் (08) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அதன்படி, கொழும்பு கோட்டை பிரதான நீதவான் பாசன் அமரசேன, இன்று (02) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவரின் கைபேசியை FBI வழியாக ஐக்கிய இராச்சியத்தில் நிறுவனத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு குற்றப்பிரிவு இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், உயிரிழந்தவரின் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட பச்சை நிற பட்டியை அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சாட்சிச் சட்டத்தின் 126 ஆம் பிரிவின் பிரகாரமும், உயர் நீதிமன்ற சட்ட இலக்கம் 31 இன் விதிகளின் பிரகாரமும், மரணமடைந்த கபில சந்திரசேனவிற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அல்லது அவரது சாட்சிகளான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன மற்றும் சட்டத்தரணி உதார முஹந்திரம் ஆகியோருக்கு வழங்கப்பட்ட எழுத்துமூல அல்லது வாய்மூல விடயங்களை வெளிப்படுத்த வேண்டாம் எனத் தீர்மானித்ததாக நீதவான் தனது உத்தரவின் போது தெரிவித்தார்.
இதன்படி, 19 ஆவது மற்றும் 20 ஆவது சாட்சிகளுக்கு அழைப்பாணைகளை வழங்கிய நீதிபதி, அவ்விரு சாட்சிகளையும் 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய, மேலதிக விசாரணைக்காக வழக்கை 5 ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்துள்ளார்.