சென்னை
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள ‘சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த மசோதா – 2026’ அமலுக்கு வந்தால், தமிழகத்தின் முக்கிய வருவாய் ஆதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என மக்களவை உறுப்பினர் துரை வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று காலை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனை நேரில் சந்தித்து அவர் விரிவாகப் பேசினார்.
மாநில உரிமையைப் பறிக்கும் புதிய மசோதா:
இது குறித்து துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2026, மாநிலங்களின் அதிகாரங்களையும் நிதி ஆதாரங்களையும் கடுமையாகப் பாதிக்கும். எதிர்க்கட்சி எம்.பி-க்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு, எவ்வித விவாதமுமின்றி இம்மசோதா கடந்த ஆகஸ்ட் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரிவு 9D – மாநில வருவாய்க்கு ஆப்பு:
இம்மசோதாவில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள ‘பிரிவு 9D’, கனிம வளங்கள் மற்றும் கனிமங்கள் தாங்கிய நிலங்கள் மீது மாநில அரசுகள் வரி விதிப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்துகிறது. இதனால், மாநில அரசுகளால் ஏற்கனவே விதிக்கப்பட்டு, இதுவரை வசூலிக்கப்படாமல் உள்ள பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் நிலுவைத் தொகையை இனி வசூலிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பும், தமிழகத்தின் வருவாயும்:
கடந்த 2024-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கனிமங்கள் தாங்கிய நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே உள்ளது எனத் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்தது. இதன்படியே தமிழக அரசு சட்டம் இயற்றி வரி வசூலித்து வருகிறது. 2025-26 நிதியாண்டில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை மூலம் கிடைத்த ரூ.4,395.68 கோடி வருவாயில், ரூ.2,265 கோடி கனிம வளம் கொண்ட நிலத்திற்கான வரியின் மூலமே கிடைத்துள்ளது. இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால், தமிழகத்தின் இந்த மாபெரும் வருவாய் ஆதாரம் அடியோடு பறிபோகும்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுப்பார்:
இது வெறும் வருவாய் இழப்புப் பிரச்சினை மட்டுமல்ல; மாநிலங்களின் நிதிசார் தன்னாட்சிக்கும், இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கே விடப்பட்ட மாபெரும் சவால். இதை நிதியமைச்சர் மரிய வில்சனிடம் விரிவாக எடுத்துரைத்து, தேவையான சட்டரீதியான முன்னெடுப்புகளைத் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினேன். எனது கோரிக்கையைக் கவனமுடன் கேட்டறிந்த நிதியமைச்சர், முதலமைச்சர் அன்பு சகோதரர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ளும் என உறுதியளித்துள்ளார்,” என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.
#DuraiVaiko #MineralBill2026 #MariaWilson #ChiefMinisterVijay #JosephVijay #ThalapathyVijay #TVKGovernment #TamilNaduNews #Chennai #TNFinance #SupremeCourt #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates