சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால நிவாரணங்களை வழங்கும் திட்டத்திற்காக, கனடாவின் டொராண்டோ மகா விகாரையின் வழிகாட்டலில் அங்கு வாழும் ஸ்ரீலங்கா சமூகத்தினரின் பங்களிப்புடன் சேகரிக்கப்பட்ட 20,000 டொலர் நிதி, இன்று ‘மருத்துவமனை சேவை சபையிடம்’ (Hospital Services council) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கனடாவின் பிரதம சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய இராஜகீய பண்டித அஹங்கம ரத்தனசிறி நாயக்க தேரர், மருத்துவமனை சேவை சபையின் பணிப்பாளர் வணக்கத்திற்குரிய ராஜவெல்லே சுபூதி தேரர் மற்றும் வணக்கத்திற்குரிய அதுரலியே ஆனந்த தேரர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வணக்கத்திற்குரிய அஹங்கம ரத்தனசிறி நாயக்க தேரர் ஆற்றிய உரை:
“பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து மிகுந்த கவலையடைந்த கனடா வாழ் ஸ்ரீலங்கா மக்கள், குறிப்பாக டொராண்டோ மகா விகாரையை மையப்படுத்தி இந்த நிதியைத் திரட்டினர். கொத்மலை, மஹியங்கனை மற்றும் பதுளை போன்ற பகுதிகளில் மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் மற்றும் குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியதை நாம் கண்டோம். ஸ்ரீலங்கா மக்கள் உலகில் எங்கிருந்தாலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் மனிதாபிமானத்துடன் செயற்படுவார்கள். அவர்களின் இந்த அர்ப்பணிப்புடன் கூடிய நிதி உரிய முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மருத்துவமனை சேவை சபையிடம் ஒப்படைக்கிறோம்.”
வணக்கத்திற்குரிய ராஜவெல்லே சுபூதி தேரர் ஆற்றிய உரை:
“எமது சபை நாடுபூராகவும் உள்ள மருத்துவமனைகளுக்கு உபகரணங்களை வழங்கி வருகின்றது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் எமது சேவை மீது கொண்டுள்ள நம்பிக்கையே இதற்கு காரணமாகும். முதலில் டொராண்டோ மகா விகாரையின் அஹங்கம ரத்தனசிறி நாயக்க தேரர் உள்ளிட்ட அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதற்கட்டமாக, கொத்மலை உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இரண்டாம் கட்டமாக, நீண்ட காலத் திட்டத்தின் கீழ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு முன்பள்ளியைத் தெரிவு செய்து அதனை முழுமையாக அபிவிருத்தி செய்யவும், அங்குள்ள மாணவர்களின் கல்வித் தேவைகளைத் தொடர்ச்சியாகக் கவனிக்கவும் தீர்மானித்துள்ளோம்.”
அரசாங்கத்திற்கும் நன்கொடையாளர்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோள்:
“அனர்த்தத்தினால் பல முன்பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் புத்தகங்கள் மற்றும் உடைகள் அழிந்துள்ளன. எனவே, முன்பள்ளிக் கல்வியில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கோருகிறோம். அத்துடன், வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் இவ்வாறான மனிதாபிமான உதவிகளுக்கு வரிவிலக்கு அளிப்பதன் மூலம், அரச அங்கீகாரம் பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊடாக நிவாரணங்களை விரைவாகக் கொண்டு சேர்க்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.”
By C.G.Prashanthan