“இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கும் சட்ட நடவடிக்கைகள் தாமதமடைந்து வருவதுடன், இது எதிர்கால முன்னேற்றம் குறித்த கவலைகளை தோற்றுவிப்பதாக ‘ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்’ (Human Rights Watch) அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய வழக்குகள் தொடர்பில் துரிதமான நடவடிக்கைகளை எடுக்கவும், சர்வதேச பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதிகளும் உறுப்பு நாடுகளும் அழுத்தமளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
“நீதி வழங்குவதில் உண்மையான அக்கறையின்மை: கடந்தகால மீறல்களை விசாரிப்பதில் இலங்கையின் ஆர்வமின்மை” (‘Not Genuine with Justice’: Sri Lanka’s Lack of Will to Prosecute Past Abuses) எனும் தலைப்பிலான 49 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை, 2024 இல் திசாநாயக்க அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ள ஏழு முக்கிய வழக்குகள் உள்ளிட்ட உள்நாட்டு நீதி மறுப்பைப் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது. நிவாரணப் பணியாளர்களின் படுகொலை, ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்பட்டமை, பேராசிரியர்கள் மற்றும் ஏனையோரின் கட்டாயக் காணாமலாக்கப்படல்கள் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகள் இன்னும் முடங்கிக் கிடப்பதாகவும், அதே வேளையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் மனித உரிமைப் பாதுகாவலர்களும் அச்சுறுத்தல்களையும் அடக்குமுறைகளையும் எதிர்நோக்கி வருவதாகவும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் சுட்டிக்காட்டியுள்ளது.
“கடந்தகால பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்குவதைத் தாமதப்படுத்தும் மற்றும் மறுக்கும் முந்தைய அரசாங்கங்களின் நடைமுறைகளிலிருந்து திசாநாயக்க நிர்வாகம் விலக வேண்டும்” என ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இயக்குநர் லூசி மெக்கர்னன் (Lucy McKernan) தெரிவித்துள்ளார். “கடந்தகால குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவதை உறுதி செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் நம்பகமான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வலியுறுத்த வேண்டும்.”
ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு 32 பாதிக்கப்பட்ட நபர்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களிடம் நேர்காணல்களை நடத்தியதுடன், நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் பிற மூலங்களை விரிவாக ஆய்வு செய்து இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.
தெற்கில் 1987-1989 காலப்பகுதியில் இடம்பெற்ற ஜே.வி.பி யின் ஆயுதக் கிளர்ச்சியின் போதும், 2009 இல் முடிவுக்கு வந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடனான (LTTE) உள்நாட்டுப் போரின் போதும் அரசாங்கப் படைகளாலும் அரச சார்பற்ற ஆயுதக் குழுக்களாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர், கட்டாயமாக காணாமலாக்கப்பட்டனர், கடத்தப்பட்டனர் மற்றும் கொல்லப்பட்டனர்.
கடந்தகால மீறல்களுக்கு நீதி பெறுவதில் தோற்றுப்போன ஒரு வரலாற்றையே இலங்கை கொண்டுள்ளது. 1990களில் இருந்து மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க 10க்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்களைப் பல அரசாங்கங்கள் நியமித்த போதிலும், எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவோ அல்லது காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோருக்கு என்ன நடந்தது என்பது பற்றியோ கண்டறியப்படவில்லை. மேலும், முந்தைய நிர்வாகங்கள் வழக்குகளில் மிகக் குறைந்த முன்னேற்றத்தையே ஏற்படுத்தின அல்லது நிலுவையில் உள்ள சில குற்றவியல் விசாரணைகளைத் தடுப்பதில் தீவிரமாக தலையிட்டன.
“மனிதப் புதைகுழிகளைத் தோண்டுவது மட்டுமே நீதியை வழங்கிவிடாது. மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்களா?” என யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்ட ஒருவரின் குடும்ப உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழியிலிருந்து 582 பேரின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதிலோ அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதிலோ எவ்வித முன்னேற்றமும் ஏற்ப்படவில்லை.
இருப்பினும், முன்னர் முடக்கப்பட்டிருந்த சில முக்கியமான விசாரணைகளில் திசாநாயக்க அரசாங்கம் சில முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை, 2010 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கட்டாயமாக காணாமலாக்கப்பட்டமை மற்றும் 2008-2009 காலப்பகுதியில் கடற்படை புலனாய்வு அதிகாரிகளால் கப்பம் கோரி 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை ஆகிய வழக்குகள் இதில் அடங்கும்.