உலகச் சந்தையில் மிக வேகமாக அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலையானது தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, கடந்த திங்கட்கிழமை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 2022 ஜூலை மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 100 அமெரிக்க டொலர்களைக் கடந்ததுடன், அதிகபட்சமாக 119 டொலர்கள் வரை பதிவாகியிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில், “போர் மிக விரைவில் முடிவுக்கு வரும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 90 டொலர்கள் வரை சரிவடைந்தது. இது 8 சதவீத வீழ்ச்சியாகும்.
இன்று காலை ஆசிய சந்தை வர்த்தகம் ஆரம்பமான போது, ஈரானியப் போர் சூழலால் கடந்த சில நாட்களாக நிலவிய கடும் ஸ்திரமற்ற நிலைக்குப் பிறகு, எண்ணெய் விலைகள் ஒப்பீட்டளவில் ஸ்திரமான நிலையை எட்டியுள்ளன.
இன்று காலை நிலவரப்படி சந்தை விலைகள்:
அமெரிக்க கச்சா எண்ணெய் (WTI): ஒரு பீப்பாய் சுமார் 83.35 டொலர்கள்.
பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய்: ஒரு பீப்பாய் சுமார் 87.88 டொலர்கள்.