மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 9-12 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதன் பலனை நுகர்வோருக்கு வழங்குவது குறித்து இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் கவனம் செலுத்தி வருகின்றது.
மசகு எண்ணெய் வருகை: இந்தியக் கப்பல் கழகத்திற்குச் சொந்தமான ‘தேஷ் மஹிமா’ கப்பல் 97000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயுடன் நேற்று இலங்கை வந்தடைந்தது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த எண்ணெய் தற்போது சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றது.
அடுத்த கப்பல்: இதே அளவிலான இரண்டாவது மசகு எண்ணெய் கப்பல் ஏப்ரல் 29 அன்று வரவுள்ளது. இது நாட்டின் ஒரு மாதத் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானது.
விலை குறித்த வதந்திகளுக்கு மறுப்பு: ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 286 அமெரிக்க டாலருக்கு வாங்கப்பட்டதாகச் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளைத் தலைவர் முற்றாக மறுத்துள்ளார். நேற்று வந்தடைந்த கையிருப்பு ஒரு பீப்பாய் 71 அமெரிக்க டாலர் விலையிலேயே வாங்கப்பட்டதாக அவர் தெளிவுபடுத்தினார்.
விசாரணை: தவறான தகவல்களைப் பரப்பி பொதுமக்களை அச்சுறுத்துபவர்களுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அமைதி நீடித்தால் கப்பல் காப்புறுதி மற்றும் போக்குவரத்துச் செலவுகள் குறையும். தற்போதைய நிலையில் காப்புறுதிச் செலவு சரக்கின் பெறுமதியில் 40-50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை ) தொடர்ந்து திறந்திருக்கும் பட்சத்தில் இந்தச் செலவுகள் குறைந்து அதன் பலன் நுகர்வோருக்கு விலை குறைப்பாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் 2009 முதல் 2026 ஏப்ரல் 15 வரையான காலப்பகுதியில் நுரைச்சோலை மின்நிலையத்திற்கான நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.