ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின் நீதி அமைச்சராக கடமை ஆற்றி வருகின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தற்போது நீதி அமைச்சராக பதவி வகிக்கும் ஹர்ஷண நாணயக்கார அன்று மட்டக்களப்பு சென்று சஹ்ரான் வழக்கில் முன்னிலையானதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பிற்காக குறிப்பிடத்தக்களவு சேவையாற்றிய மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே போன்ற புலனாய்வு பிரிவு பிரதானிகளை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்துவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் சஹ்ரான் போன்ற குற்றவாளிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இன்று அமைச்சர் பதவி வகிப்பது நகைப்பிற்குரியது என தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் ஊடாக தமிழீழ விடுதலை புலி புலம்பெயர் சமூகம் மகிழ்ச்சி அடையும் எனவும் நாட்டின் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு பலவீனமடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
படை வீரர் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கே இந்த அரசாங்கம் தயங்குவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களை அரசாங்கம் உதாசீனம் செய்வதாகவும், அரசாங்கம் கலாச்சாரங்களை பேணுவதற்கு நாட்டம் காட்டவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள அரசாங்கம் பொருளாதாரத்தை கையாள்வதில் தோல்வி அடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கள்வர்களை கைது செய்வதாக கூறி ஆட்சி பீடம் ஏறிய இந்த அரசாங்கம் பட்டப் பகலில் கொள்ளைகளில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நிலக்கரி இறக்குமதியில், தரம் குறைந்த மருந்து பொருள் இறக்குமதியில் அரிசி கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வதில் போன்ற பல்வேறு விடயங்களில் ஊழல் மோசடிகள் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் மக்களை துன்புறுத்தும் வகையில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
கொள்கைகளை காட்டிக் கொடுக்காத நாட்டின் கலாச்சாரத்தையும் இன உரிமைகளையும் அறிந்த புதிய தலைமை ஒன்று தற்பொழுது நாட்டுக்கு அவசியமாகின்றது என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.