அமெரிக்காவின் ‘இன்டிபென்டன்ஸ்’ (Independence-variant) ரகத்தைச் சேர்ந்த கடலோரப் போர் அதிவேகக் கப்பலான ‘யுஎஸ்எஸ் கன்பெரா’ (USS Canberra – LCS 30), வெள்ளிக்கிழமை (12) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (US Central Command) உத்தியோகபூர்வ இணையத்தளத்தின்படி, ஏப்ரல் 2026 இல், ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் கப்பல்களுக்கு எதிரான கடல்சார் முற்றுகையின் போது, இந்த யுஎஸ்எஸ் கன்பெரா (LCS 30) அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.
யுஎஸ்எஸ் துல்சா (USS Tulsa), யுஎஸ்எஸ் சார்லஸ்டன் (USS Charleston) மற்றும் யுஎஸ்எஸ் சாண்டா பார்பரா (USS Santa Barbara) ஆகிய கப்பல்களைத் தொடர்ந்து, சமீபத்திய ஆண்டுகளில் கொழும்புக்கு வருகை தந்த நான்காவது அமெரிக்க கடற்படையின் கடலோரப் போர் அதிவேகக் கப்பலாக இந்த யுஎஸ்எஸ் கன்பெராவின் வருகை அமைந்துள்ளது.
இத்தகைய மேம்பட்ட போர்க்கப்பல்களின் தொடர்ச்சியான வருகையானது, ‘இந்தோ-பசுபிக் பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பு, ஒத்துழைப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்காக அர்ப்பணிக்கப்பட்ட கடல்சார் பங்காளிகளுக்கு இடையிலான தொடர்ச்சியான ஈடுபாட்டின் முக்கியமான முக்கியத்துவத்தை’ அடிக்கோடிட்டுக் காட்டுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
கமாண்டர் ஜேம்ஸ் மெக்லாலின் (Cmdr. James McLaughlin) தலைமையில் இயங்கும் யுஎஸ்எஸ் கன்பெரா, தனது அடுத்தகட்ட இராணுவப் பணிகளைத் தொடர்வதற்கு முன்னர், எரிபொருள் நிரப்புவதற்கும் விநியோகங்களை மறுசீரமைப்பதற்கும் ஒரு குறுகிய காலத் தளவாட நிறுத்தமாக கொழும்புக்கு வந்துள்ளது.
ஜூலை 2023 இல் கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட யுஎஸ்எஸ் கன்பெரா, அமெரிக்க கடற்படையின் ‘இன்டிபென்டன்ஸ்’ ரக கடலோரப் போர் கப்பற்படையின் ஒரு பகுதியாகும். இது கடற்கரைக்கு அருகாமையிலுள்ள சூழல்களில் அதிவேக மற்றும் சுறுசுறுப்பான செயல்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கப்பலானது கடல்சார் பாதுகாப்பு, முன்னிலை இருப்பு, கடல் கட்டுப்பாடு மற்றும் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் உட்பட பலதரப்பட்ட இராணுவப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.