பிரித்தானிய அரச குடும்பத்தின் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி மீண்டும் பிரித்தானியாவுக்கு இடம்பெயரத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய நாளிதழான ‘தி டெலிகிராஃப்’ வெளியிட்ட தகவலின்படி, இளவரசர் ஹாரியும் மேகனும் இம்மாத பிற்பகுதியில் அமெரிக்காவிலிருந்து லண்டனுக்கு வெளியே உள்ள ஒரு தனியார் இல்லத்துக்கு இடம்பெயரத் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், எதிர்வரும் கல்வித் தவணைக்காக தங்களது குழந்தைகளான ஆர்ச்சி (வயது 7) மற்றும் லிலிபெட் (வயது 5) ஆகியோரை பிரித்தானியப் பாடசாலைகளில் சேர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இடம்பெயர்வது தொடர்பான திட்டம் குறித்து மன்னர் சார்லஸுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையே (16) முதன்முதலில் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை மாதம் இந்தத் தம்பதியினர் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட குடும்ப விஜயத்தின்போது இது குறித்து பேசப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை என்பதை இது காட்டுகிறது. இருப்பினும், அரச குடும்பத்தினரைத் தனிப்பட்ட முறையில் அடிக்கடி சந்திப்பதற்கான வாய்ப்பை மன்னர் சார்லஸ் வரவேற்பதாக கூறப்படுகிறது.
அத்துடன், ஹாரி – மேகன் தம்பதி அரச குடும்பத்தில் பணியாற்றும் உறுப்பினர்களாக அல்லாமல், தனிப்பட்ட நபர்களாகவே தொடர்வார்கள் என்றும் அவர்களின் பொறுப்புகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் மன்னர் சார்ல்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போது கலிபோர்னியாவில் வசித்து வரும் இந்தத் தம்பதியினர், அரச குடும்பப் பொறுப்புகளில் இருந்து விலகிய பிறகு 2020ஆம் ஆண்டில் பிரித்தானியாவிலிருந்து வெளியேறி வட அமெரிக்காவுக்குச் சென்றனர். அதன் பிறகு அரச குடும்பத்துடன் இவர்களுக்கு இடையே பகிரங்கக் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. பத்திரிகையாளர்களின் தேவையற்ற தலையீடு, பிரித்தானிய நிறுவனங்களில் நிலவும் இனவெறி, இணையவழி அச்சுறுத்தல்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இடையிலான சிக்கலான உறவுகள் ஆகியவையே தங்களது வெளியேற்றத்துக்கு முக்கியக் காரணங்கள் என ஹாரியும் மேகனும் முன்னதாக குறிப்பிட்டிருந்தனர்.
அரச வாழ்க்கையிலிருந்து விலகிய போதிலும், 2022இல் தனது பாட்டியான ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு மற்றும் அதற்கடுத்த ஆண்டில் தனது தந்தை மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழா உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்காக ஹாரி பல முறை பிரித்தானியாவுக்குச் சென்று வந்துள்ளார்.