மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரை பகுதியை நோக்கி நேற்றையதினம் சனிக்கிழமை (15.11.2025) பிற்பகல் ஒரு தொகை டொல்பின் மீன்கள் கூட்டமாக கடற்கரையை வந்தடைந்துள்ளன.
இந்தநிலையில், இதனை அறிந்த அப்பகுதி கடற்றொழிலாளர்கள், பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் சென்று அவற்றை பார்வையிட்டதோடு, சிறுவர்களுடன் டொல்பின் மீன்கள் விளையாடியதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
குறித்த டொல்பின் மீன் இனம் மன்னார் மாவட்டத்தில் கரையோர பகுதிக்கு கூட்டமாக வருகை தந்தமை இதுவே முதல் தடவையாகும்.
நீண்ட நேரம் இலுப்பை கடவை கடற்கரையோரங்களில் கூட்டமாக சுற்றித் திரிந்த குறித்த டொல்பின் மீன்களை தமது இருப்பிடம் நோக்கி செல்ல சில கடற்றொழிலாளர்கள் உதவி செய்தனர்.
இந்தநிலையில், குறித்த டொல்பின் மீன்கள் மீண்டும் கூட்டமாக தமது இருப்பிடத்தை நோக்கி சென்றது. குறித்த அரிய காட்சியை கடற்றொழிலாளர்கள் தமது கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.