இலங்கையில் உள்ள கல்வி அமைச்சின் பாடத்திட்டங்களில் தமிழர் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. வரலாறு, சித்திரம் போன்ற பாடங்களில் தமிழ் மன்னர்களின் பெயர்கள், அக்கால இலச்சினைகள்,கல்வெட்டுக்கள், திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன. 1982 களில் இலவச பாடநூல் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்ட பின் தமிழர்கள் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி சீர்த்திருத்தத்தில் இந்த தவறு திருத்தப்படுமா என தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறிதரன் பிரதமரிடம் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (03) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் பிரதம அமைச்சரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமாசூரியவிடம் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
இலங்கையில் சிங்கள மக்களைப்போல் தமிழர்களும் வரலாற்று அடிப்படைகளைக் கொண்ட, இந்த மண்ணுக்கு பூர்வீகமான சொந்த உரித்துக்கொண்ட தேசிய இனம். விஜயனும் தோழர்களும் இந்த நாட்டுக்கு வரும் முதலே பஞ்ச ரச்சரங்களுடன் நாகர்களாக, இயக்கர்களாக தமிழர்கள் ஈழத்து மண்ணில் வாழ்ந்து வந்தார்கள் என்பதை, மகாவம்சம் முதல் ஆய்வாளர்கள் வரை குறிப்பிடுகிறார்கள்.
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் இந்த மண்ணை வன்வழைப்பு செய்து அதிகார ஆட்சி செய்த போதும் தமிழர்கள் தீரத்துடன் அவர்களுக்கு எதிராக போராடியுள்ளார்கள். குறிப்பாக வடக்கு கிழக்கு மண்ணில் அரசுகள் அமைத்து சங்கிலியன்,பண்டாரவன்னியன், பரராஜசேகரன் போன்ற மன்னர்கள் தீரத்துடன் தாயக தேசத்திற்காக போராடியுள்ளனர்.
நல்லநாச்சி போன்ற பெண் சிற்றரசர்களும் இந்த மண்ணின் விடுதலைக்காக போராடித் தங்களை அர்ப்பணித்தவர்கள். 1920 ஆம் ஆண்டுக்கு பின்னர் அநாகரிக தர்மபால, டி.பி. ஜாவா போல ஆறுமுகநாவலரும் சைவத்தையும், தமிழையும் பாதுகாக்கவும், வளர்க்கவும் போராடியுள்ளார்.
இலங்கையில் உள்ள கல்வி அமைச்சின் பாடத்திட்டங்களில் தமிழர் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. வரலாறு, சித்திரம் போன்ற பாடங்களில் தமிழ் மன்னர்களின் பெயர்கள்,அக்கால இலச்சினைகள்,கல்வெட்டுக்கள், திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன. 1970களில் தமிழ், வரலாற்று பாடநூல்களில் தமிழரின் வரலாறு ஓரளவுக்கேனும் குறிப்பிடப்பட்டிருந்தது. 1982களில் இலவச பாட நூல் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டபின் தமிழர்கள் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வந்துள்ளதை காண முடிகிறது.
கடந்த யுத்த காலங்களை பயன்படுத்தி சங்கிலியன், பண்டாரவன்னியன்,நல்லநாச்சி, எல்லாளன் போன்ற தமிழ் மன்னர்களின் வரலாறுகள் இல்லாதழிக்கப்பட்டுள்ளதை அமைச்சர் அறிவாரா? இலங்கையின் விடுதலையில் தீரத்துடன் போராடிய தமிழ் மன்னர்களின் வரலாறு பாட நூல்களில் உட்புகுத்தப்படுமா? கல்வித்திட்டத்தில் வரலாற்றுப் பகுதியில் தமிழர் வரலாற்றுக்குரிய தனி அங்கீகாரம் வழங்குவதில் என்ன தடை இருக்கிறது?
தமிழர் வரலாற்றின் இலட்சினைகள், கல்வெட்டுக்கள், ஓலைகள் இந்நாட்டில் பாதுகாப்பாக பேணப்படுகின்றதா? சங்கிலியன்,பண்டாரவன்னியன் நல்லநாச்சி, எல்லாளன் போன்ற மன்னர்களின் வரலாறுகளை தமிழ், வரலாறு, சித்திரப் பாடங்களில் இருப்பதற்கு தங்களால் உறுதிப்பாடு தரமுடியுமா? என்று கேள்வியெழுப்பினார்.