இலங்கையின் வடக்கே காங்கேசன்துறைக்கும், இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பயணிகள் படகு, வெள்ளிக்கிழமை இரவு இயந்திரக் கோளாறு காரணமாகப் பல மணிநேரம் நடுக்கடலில் தவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2:30 மணியளவில் புறப்பட்ட இந்தப் படகு, சுமார் நான்கு மணி நேரத்திற்குள் நாகப்பட்டினத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கடல் கொந்தளிப்பு மற்றும் இயந்திரக் கோளாறு காரணமாக இரவு 10:45 மணியளவிலேயே படகு துறைமுகத்தைச் சென்றடைந்தது.
‘த ஹிந்து’ (The Hindu) செய்தியின்படி, 144 பயணிகளுடன் பயணித்த இந்தப் படகு, நாகப்பட்டினம் கடற்கரையிலிருந்து சுமார் இரண்டு கடல் மைல் தொலைவிலுள்ள ‘கல்லார்’ அருகே இயந்திரக் கோளாறுக்கு உள்ளானது.
தத்தளித்துக் கொண்டிருந்த படகுக்கு உதவ இந்திய அதிகாரிகளும் உள்ளூர் மீனவர்களும் விரைந்தனர். பின்னர் அந்தப் படகு மெதுவாக இழுத்து வரப்பட்டுத் துறைமுகத்தைச் சென்றடைந்தது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்துத் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த படகுச் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.