யாழ்ப்பாணம் – சிந்துப்பாத்தி செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் நான்காம் நாள் இன்று (30) யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய அகழ்வுப் பணியின் போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 211 மற்றும் 220 ஆகிய இலக்கங்களுடைய மனித எலும்புக்கூடுகளின் எஞ்சிய பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டு, அடையாளமிடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவை அனைத்தும் தற்போது நீதிமன்றக் கட்டுப்பாட்டின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
புதைகுழியின் வடமேற்குப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் மூலம், தொடர்ச்சியாகப் பல்வேறு எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.
இன்றைய அகழ்வுடன் சேர்த்து மொத்தமாக 241 எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதுவரை 240 எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய அகழ்வின் போது நாணயத்தை ஒத்த ஒரு சான்றுப் பொருளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அகழ்வுப் பணியில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்டனர்.
தற்போது, ஏற்கனவே தோண்டப்பட்ட பகுதிகளில் உள்ள மணலை அரித்தெடுத்து ஆய்வு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.