செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது.
மூன்றாம் கட்டத்தின் 33 ஆவது நாளான இன்றைய அகழ்வாய்வில் புதிதாக 2 எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டன. அந்த இரண்டு எலும்புக்கூடுகளும் குழந்தைகளினுடையதாக காணப்படுகிறது.
இன்று அடையாளப்படுத்தப்பட்ட 2 எலும்புக்கூடுகளுடன் செம்மணி புதைகுழியில் மொத்தமாக அடையாளப்படுத்தப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 414 ஆக அதிகரித்துள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்று புதன்கிழமை (15) காலை ஆரம்பிக்கப்பட்டது.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32 நாட்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில் , கடந்த 23ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகி முதலாம் கட்ட அகழ்வு பணிகள் 09 நாட்கள் நடைபெற்றதில், 19 மனித என்புகூடுகள் மீட்கப்பட்டன.
அதனை அடுத்து இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு , செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி வரையிலான 45 நாட்கள் நடைபெற்ற போது , முதலாம் கட்டத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்ட 19 என்பு கூடுகள் உட்பட 240 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 56 நாட்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மே மாதம் 09ஆம் திகதி வரையிலான 12 நாட்கள் இடம்பெற்ற அகழ்வு பணிகளில் 21 என்பு கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மீண்டும், மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த ஜூன் மாதம் 1ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 23ஆம் திகதி வரையிலான 22 நாட்கள் நடைபெற்ற நிலையில், பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.