முறையான விசாரணைகள் இன்றி முன்னெடுக்கப்பட்ட அரசியல் உள்நோக்கம் கொண்ட இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (31) காலை 8.00 மணி முதல் 24 மணிநேர நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் ஹன்சமால் வீரசூரிய, சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றப் பட்டியலைத் தமது சங்கம் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்தார். முன்னைய அரசாங்கங்களின் கீழ் இவ்வாறானதொரு பட்டியல் தயாரிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாகக் கூறிய அவர், இடமாற்றச் செயல்பாட்டில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் விவரிக்கப்பட்ட அநீதியான மற்றும் அரசியல் செல்வாக்குமிக்க தீர்மானங்களைச் சுட்டிக்காட்டுவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும் மேலும் தெரிவித்தார்.