யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதி கோரி, இன்று செவ்வாய்க்கிழமை(10) அன்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற இச் சம்பவத்தில் உயிரிழந்த 17 வயதுடைய அருள்பாயஸ் என்ற சிறுவனுக்கு நீதி கோரியே மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிறுவனின் உறவினர்களால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்றத்திற்கு முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாருக்கு எதிரான கோஷங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். எனினும், நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது என பொலிஸார் அறிவுறுத்தியதை அடுத்து, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவத்தின் போது தனது மகனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியே சுட்டதாக உயிரிழந்த சிறுவனின் தந்தை பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார். பொலிஸாரின் இத்தகைய மிலேச்சத்தனமான கொலைகள் இனியொருபோதும் இடம்பெறக் கூடாது என வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், கொலைக்குக் காரணமான பொலிஸாருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என நீதி கோரினர்.
கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அதிகாலை 1.15 மணியளவில் வேலணை – அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற ‘ஹயஸ்’ ரக வாகனத்தின் மீது தாம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். பொலிஸார் மீது வாகனத்தை மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்றபோதே இச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் தரப்பு தெரிவித்திருந்த நிலையில், அதில் பயணித்த 17 வயதுடைய மாணவன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.